Monday, April 19, 2010

கேணல் சங்கர்














வைத்தியலிங்கம் சொர்ணலிங்கம்
(வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
18.9.1949-26.9.2001)

யாழ் மாவட்டம் வடமராட்சிப் பகுதியின் கடற்கரைப் பிரதேசமான வல்வெட்டித்துறை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு பல தளபதிகளையும் தலைவர்களையும் தந்துதவிய ஒரு ஊராகும்.

அங்கு வாழ்ந்த வைத்தியலிங்கம் தம்பதிகளுக்கு ஆறு ஆண் பிள்ளைகள். இவர்களில் இரண்டாவது மகனாக 1949ல் அவதரித்தார் சொர்ணலிங்கம். இவர் தனது ஆரம்பக் கல்வியை வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்திலும் பின்னர் ஹாட்லிக் கல்லூரியில் 1959 முதல் 1969 வரையிலும் பயின்றார்.

பள்ளி நாட்களில் உதைபந்தாட்டத்தில் சிறந்து விளங்கிய சொர்ணலிங்கம் மிகவும் துடிப்பு மிகுந்த மாணவராவார். தாமோதரம் பிள்ளை இல்லத்தின் மூலம் ஹாட்லியில் பல விளையாட்டுக்களிலும் பங்கு பற்றியவர்.

பின்னர் சென்னையில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் கல்லூரியில் விமான பொறியியல் பயின்ற அவர் அதில் சிறப்பு சித்தி பெற்று கனடாவின் `ஏர் கனடா`வில் வேலைக்குச் சேர்ந்தார். பணி நிமித்தம் கனடாவின் மொன்றியல் நகருக்குச் சென்று கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் வசித்தார்.

1981இன் ஆரம்பகாலங்களில் தனது சகோதரன் மூலமாக தமிழீழ விடுதலைப் போராட்டப்பாதையில் தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட சங்கர் அவர்கள் 1983 ஜூலை இனக்கலவரத்தின் பின்னர் தாயகம் திரும்பி தன்னை முழுமையாக போராட்டத்துடன் இணைத்துக் கொண்டார். அன்றிலிருந்து தனது இறுதி மூச்சுவரை தமிழீழ விடுதலைப் போராட்டப் பாதையில் விடுதலைப் புலிகளின் சகல நடவடிக்கைகளிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டார்.

விடுதலைப் புலிகளுடனான அவரின் தொடர்பு உண்மையில் 1971ம் ஆண்டே தொடங்கி விட்டிருந்தது. சென்னையில் தங்கி படித்த காலத்திலேயே சாதுவான தொடர்புகளை ஏற்படுத்திய அவர் கனடா சென்றதும் விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு கொள்வனவு சம்பந்தமான அலுவலகங்களை ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

1985ம் ஆண்டு சென்னை மகாலிங்கபுரம் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றின் மூலமாக புளொட் இயக்கத்திடமிருந்து பொட்டு அம்மானை மீட்டு தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமானார்.

பின்னர் தலைவருடன் சேர்ந்து இயக்கத்துக்கு சொந்தமாக கப்பல் ஒன்றையும் ரோலர் ஒன்றையும் வாங்கினார். ரோலரில் புலிகள் இயக்க வரலாற்றில் முதல் முறையாக ரேடார் ஒன்றையும் பொருத்தினார்.

தேசியத் தலைவர் அவர்களது எண்ணப்படி விடுதலைப் புலிகள் அமைப்பின் புதிய புதிய பரிமாணங்களுக்கும், கட்டுமானங்களிற்கும் செயல்வடிவம் கொடுத்து விடுதலைப் போராட்ட போரியல் வரலாற்றில் புதிய திருப்புமுனைகளை ஏற்படுத்தியவர் கேணல் சங்கர்.

ஈழப்போரில் கடற்பரப்பின் முக்கியத்துவம் கருதி தலைவரின் சிந்தனைப்படி `கடற்புறா` என்னும் பெயரில் கடற்புலிகள் அமைப்பை உருவாக்கியது மட்டுமன்றி, முதன்முதலில் சிறீலங்காக் கடற்படையின் பாரிய யுத்தக் கட்டளைக் கப்பல் ஒன்றின் மீதான கடற்கரும்புலித் தாக்குதல் ஒன்றுக்காக கடற்புலிகளான காந்தரூபன், கொலின்ஸ், வினோத் ஆகியோரைப் பயிற்றுவித்து, நெறிப்படுத்தி வெற்றிகரமான தாக்குதலொன்றை செய்துமுடித்தவர்.

அதேபோன்று விடுதலைப் புலிகளின் மகளிர் அமைப்பின் உருவாக்கத்திற்கும் உதவி புரிந்தவர். சகல போராளிகளுக்கும் போரியல் நுணுக்கங்களையும், ஆயுத, வெடிபொருட்பாவனையின் நுட்பங்களையும், காடுகளின ஒவ வொரு அங்குலங்களையும் அணுவணுவாகக் கற்பித்து, மரம், செடி, கொடி, விலங்குகள் என்பன பற்றிய தகவல்களை தெளிவுபடுத்தி பயிற்றுவித்த நல்லாசிரியர் கேணல் சங்கர்.

இறுதியாக தலைவரின் நேரடி வழிகாட்டலில் நடைபெற்ற ஓயாத அலைகள் நடவடிக்கையில் தலைவருடன் அருகில் நின்று இராணுவ அசைவுகளுக்கேற்ப போராளிகளின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தி சமர்களை, வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல உதவியவர்.

புலிகளின் விமான எதிர்ப்பு பிரிவை அமைத்ததும் சங்கர் அவர்களே. அதே போன்று 2001ல் நடைபெற்ற கட்டுநாயக்கா விமானநிலையம் மீதான தாக்குதல் திட்டத்தை உருவாக்கி அதை செம்மையாக வழி நடத்தியவரும் அவரே.

இராணுவ நடவடிக்கைகளில் மட்டுமன்றி, அரசியல் பேச்சுக்களிலும் பங்குபற்றி ஈழத் தமிழர்களது நியாயமான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியவர். இறுதியாக நோர்வே சமாதானத் தூதுக்குழுவினருடனான பேச்சுக்களின் போதும் தலைவருடன் கூட இருந்து சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டவர் சங்கர் அவர்கள். அமைதியாக இருந்தவாறு தனது ஆளுமையால், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பல்வேறு வகையிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டவர் கேணல் சங்கர் அவர்கள்.

இவர் மட்டுமன்றி இவரது குடும்பமும் தன்னை முழுமையாக விடுதலைப் போராட்டத்திற்கு அர்ப்பணித்து நிற்கின்றது. கேணல் சங்கரின் மூன்று சகோதரர்களும் தங்களை விடுதலைப் போராட்டத்துக்காக அர்ப்பணித்துள்ளனர்.

1987இல் நாவற்குழி இராணுவ முகாம் மீதான தாக்குதல் முயற்சியில் இவரது சகோதரன் சித்தார்த்(வைத்தியலிங்கம் வசீகரன்), லெப். கேணல் பொன்னம்மான் அவர்களுடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இவரே சங்கர் அவர்களை தமிழீழத் தேசியத் தலைவருடன் தொடர்புபடுத்தியவர். இவரின் இன்னொரு சகோதரன் கப்டன் கரன்(வைத்தியலிங்கம் மனோகரன்) இந்திய-சிறீலங்கா கூட்டுச் சதியால் லெப். கேணல் குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகளில் ஒருவராக `சயனைட்` அருந்தி வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இவரின் இளைய சகோதரன் மன்னாரில் இராணுவத்துடன் இடம்பெற்ற ஒரு மோதலில் காணாமல் போனார். அதன் பின்னர் அவர் பற்றி எந்த செய்தியும் இல்லை.

2000ஆம் ஆண்டில் ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது சிறீலங்கா இராணுவத்தின் எறிகணைவீச்சில் மேலும் ஒரு சகோதரர் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டார்.  ஒரே ஒரு மருத்துவ சகோதரன் மற்றும் தற்போது ஐக்கிய ராஜ்ஜியத்தில் வசித்து வருகிறார்.

இவ்வாறு கேணல் சங்கர் அவர்களது குடும்பம் தமிழீழ விடுதலைக்காய் இரத்தம் சிந்தி தன்னை முழுமையாக அர்ப்பணித்து நிற்கிறது.

தியாகி திலீபனின் பதின்நான்காம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வுகளில் பங்கு பற்றுவதற்காக ஒட்டுசுட்டானிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளை 26-09-2001 காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறீலங்காப் படைகளின் ஊடுருவல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கேணல் சங்கர் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் சாய்ந்தது. ஈழ விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று.

தலைவனுக்கு உற்ற தோழன். போராளிகளுக்கு நல்ல ஆசான். பழகுவதற்கு பண்பானவன். மக்களுக்கு அரசியல், இராணுவ அணுகுமுறைகளில், எதிரிக்கு ஒரு சவால் என இருபது வருடம் நன்கு செழித்து வேர்விட்டு விழுதெறிந்த ஆலமரம் கேணல் சங்கர்.

-சாணக்கியன்












































































No comments:

Post a Comment