Tuesday, April 27, 2010

மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை வரலாறு பாகம் இரண்டு














வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை உத்தியோகம் நிமித்தம் அநுராதபுரத்திற்கு 1953 செப்டெம்பரில் மட்டக்களப்பிலிருந்து மாற்றலாகிச் சென்றார்கள்.

அவர்களுக்கான தங்கும் விடுதி குருநாகல் வீதியில் இருந்த ஏலாலசோண என்னும் இடத்திலேயே கொடுக்கப்பட்டிருந்தது. இவ்விடுதி அன்றைய குருநாகல் - புத்தளம் பிரதான வீதிகளை இணைக்கும் சிறு வீதி ஒன்றில் குருநாகல் அநுராதபுர வீதிக்கு சமீபமாக அமைந்தது.

இவர்களின் விடுதிக்கு அருகாமையில் நெல்லியடியைச் சேர்ந்த இராசையா என்ற அரசாங்க ஊழியருக்கு கொடுக்கப்பட்ட விடுதி அமைந்திருந்தது.

ஏலாலன், எல்லாளன், ஏலாரா என்னும் பெயர்கள் யாவுமே குறிப்பது ஈழாளன் என்னும் அரசனையே ஆகும். “ஈழம்” என்பது தூய தமிழ்ச் சொல்லாகும்.

ஈழாளனுடைய காலமான கி.மு 145 – 101 வரையான காலப்பகுதியில் இன்றைய இலங்கை முழுவதுமே ஈழம் என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது.

ஈழம் என்னும் அடியாகப் பிறந்த பெயரே இலங்கா என்பதாகும் இதுவே பின்பு இலங்கை என தமிழில் மாற்றமடைந்தது. இங்கு குறிப்பிடத் தக்கது. இவ்வாறு ஈழம் என்னும் இடத்தைக் குறிப்பிடும் பல தொல்லியல் சான்றுகளை INSCRIPTIONS OF CEYLON – VOLUME 1 என்னும் புத்தகத்திலும் ANNUAL RE-PORT ON SOUTH INDIAN EPIGRAPHY – VOLUME 1(1908) என்னும் புத்தகங்களிலும் நாம் காணமுடியும்.

இங்கு கூறப்பட்டவை யாவுமே 2000 வருடங்களுக்கு முற்பட்ட வையாகும். ஆரம்ப காலங்களில் முழு இலங்கையையும் குறிக்கப்பயன்பட்ட இச்சொல்லா னது இன்று இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களிற்குள் சுருங்கியது பெரு வரலாறாகும்.

“ஈழ” என்பதன் அடியாகப் பிறந்த “இலங்கா” என்பது முழு நாட்டினையும் குறிக்க அதன் மூலச்சொல்லான ஈழம் என்பது இலங்கையின் வட, கிழக்குப் பகுதியினையே இன்று குறித்து நிற்கின்றது.

இன்றைய உலகின் மெக்ஸிக்கோ நாட்டின் தலைநகராக மெக்ஸிக்கோசிற்றி குறிக்கப்படுவதுபோல அன்றும் ஈழத்தில் “ஈழஊர்” என்னும் ஓரிடத்தை வரலாற்றில் நாம் காணமுடியும். இது இன்றைய பூநகரிப் பகுதியின் “வேரவில்”; எனப்படும் பகுதியாகும். அதன் அருகில் இருக்கும் குடா “ஈழவன் குடா” என அழைக்கப்பட்டது.

இவ்வாறு போர்த்துக்கேயர் காலம்வரை குறிப்பாக 1621ம் ஆண்டு இப்பகுதி ஈழ ஊர் என அழைக்கப்பட்ட வரலாற்றுக் குறிப்புகள் எம்மிடம் உண்டு. (THE TEMPRAL AND SPIRITUL CONQUEST OF CEYLON,FERNAO DE QUEYROZ) அநுராதபுரத்திற்கு வடக்கே இருந்து வருபவர்களை குறிக்கும் சொற்களாக சோழ, ஈழ என்பன பௌத்த இதிகாசங்களில் காணப்படுகின்றன. இதுபோலவே பௌத்த மத இலக்கியமான மகாவம்சத் திலும் மேற்கூறிய ஈழாளனை சோழ நாட்டிலிருந்து வந்ததாக குறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மூலநூலான தீபவம்சத்தில் இவனுடைய பெயர் (ஈ)ஏலார எனக் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர சோழநாட்டில் இருந்து வந்தவன் என்ற குறிப்பேது மில்லை.

இவ்வாறு ஈழ ஊர்ப்பகுதியிலிருந்து அநுராதபுரத்தை வெற்றி கொண்ட காரணத்தால் இவனுடைய பெயர் ஈழாளன் அல்லது ஈழரா(சா) என அழைக்கப்பட்டுள்ளது. எனினும் மொழிமாற்றத்தில் ஏற்பட்ட தொடரான குளறுபடியால் பின்பு ஈழாளன், ஏலாலன் அல்லது எல்லாளன் என
மாற்றமடைந்தது. இவ்வரசன் 44 வருடங்கள் அநுராதபுரத்திலி ருந்து நல்லாட்சி செய்தபின் தனது வயோதிப வயதில் துட்டகைமுனு என்னும் இளையனான பௌத்தமத அரசானால் தனிச்சமரில் கொல்லப்பட்டார். இவ்வாறு இவன் வீரமரண மடைந்து அவனது இறுதிக்கிரியை நடைபெற்ற இடத்திலேயே துட்டகைமுனுவால் ஒரு நினைவுத்தூபி அமைக்கப்பட்டு அது ஏழாளன் நினைவுத் தூபி (TOMB) எனவும் அழைக்கப்பட்டு வந்தது.

அப்பகுதி ஏழாளனின் நினைவுத் தூபிக்கு அருகா மையில் இருந்ததால் ஏழாளசோண என அன்று முதல் அழைக்கப்பட்டு வருகின்றது. “சோண” என்னும் வடமொழிச் சொல் அருகாமை என்னும் பொருள் கொண்டது.

இந் நினைவுத்தூபிக்கு முன் இருந்த ஒழுங்கையிலேயே பிரபாகரனின் தந்தையாரான திரு.வேலுப்பிள்ளைக்கு உரிய விடுதி வழங்கப்பட்டிருந்தது.  இவ்விடுதியிலிருந்து புறப்பட்டு வேலைக்கு அல்லது வெளியில் எங்கு செல்வதானாலும் ஈழாளனுடைய நினைவைத் தாங்கி நிற்கும் இச் சேதியத்தைக் கடந்துதான் செல்லவேண்டும். இது தினசரி நடைபெறும் சம்பவமாகும்.  இந்நிலையில் பவித்திரமான வேலுப்பிள்ளை பார்வதி தம்பதியினருக்கு கருவுண்டானது.

இக்கருவே பிரபாகரனாக பின்பு அவதாரமானது. தினம் தினம் ஈழாளனுடைய அந்த நினைவுத்தூபியினைத் தரிசித்து வாழ்ந்த அந்தத் தம்பதியினருக்கு தமிழ்ஈழம் என்னும் நாட்டைஉருவாக்க முயன்ற மகன் பிறந்தது ஆச்சரியமில்லை. கர்ப்பமுண்டாகிய பெண் தொடர்ச்சியாக எதனைக் கவனமாக மிக உள்ளுணர்வுடன் பார்க்கின்றாரோ அல்லது சிந்திக்கின்றாரோஅவ்வாறே குழந்தையின் உணர்வுகளும் உருவாகும் என்பது இக்கால நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்பு.

1954ம் ஆண்டு கார்த்திகை மாதம் 26ம் நாளில் தலைவர் பிரபாகரன் அவர்கள் பிறந்தார்.  அன்று பிரபலமாயிருந்த இணுவில் மகப்பேற்று நிலையத்தில் இவர் அவதரித்தார்.

அவருடைய தாய்மாமனான வல்லிபுரம் வேலுப்பிள்ளை தமிழரின் வரலாற்றை மாற்றப்போகும் அக்குழந்தைக்கு பிரபாகரன் என்னும் பெயரை இட்டார்.

1955 ஒக்டோபரில் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கு மட்டக்களப்பிற்கு வேலையின் நிமித்தம் மாற்றல் கிடைத்தது. அநுராதபுரத்திற்கு மூன்று குழந்தைகளுடன் மாற்றலாகிச் சென்ற வேலுப்பிள்ளை தம்பதியினர் ஈழாளனின் நினைவில் பிறந்த குழந்தையுடன் அதாவது நான்காவது மழலைப் பிரபாகரனுடன் மீண்டும் மட்டக்களப்பிற்குத் திரும்பினார்.

முன்பு வேறு இடத்தில் இருந்த வேலுப்பிள்ளை குடும்பத்தினர் இம்முறை மட்டக்களப்பு தாமரைக்கேணி குறுக்கு வீதியில் 7ம் இலக்க வீட்டில் தமது வாழ்க்கையை ஆரம்பித்தனர். அந்த வீதியில் குடியிருந்த அனைத்துக் குடும்பங்களுடனும் நல்லுறவை வைத்திருந்த இவர்கள் அமைதியானவர்கள் மற்றும் பிரச்சனை ஏதுவும் இல்லாதவர்கள் என்பதாலும் அவ்வீதியின் அனைத்து வீடுகளிலும் சிறுவனாகிய தலைவர் பிரபாகரனுக்கு நிரம்ப மரியாதை.

குறிப்பாக அவ்வீதியில் 10ஆம் இலக்க வீட்டில் வசித்து வந்த பண்டிதர் சபாபதி என்பவர் வீட்டிலேயே சிறுவயதுப் பிரபாகரன் தனது நேரத்தை அதிகமாகச் செலவிட்டார். எதிர் எதிராக இருந்த வீடுகள் என்பதைவிட பண்டிதர் சபாபதியின் மகளான முத்துலெட்சுமிக்கு சிறுவன் பிரபாகரன் மீது அளவுகடந்த வாஞ்சை.

இளம் ஆசிரியரான அவர் பாடசாலை நேரம் தவிர்ந்த நேரங்களில் பிரபாகரனைத் தூக்கிச் சென்று விளையாடுவார். இவ்வாறே பாடசாலை செல்லும்வரை பண்டிதர் சபாபதியின் வீட்டில் ஆசிரியையான முத்துலெட்சுமியுடன் தனது நேரங்களை கழித்ததினால் பாடசாலை செல்லுமுன்னேயே பண்டிதர் சபாபதியிடமும் முத்துலெட்சுமியிடமும் தனது ஆரம்பக் கல்வியை ஆரம்பித்துவிட்டார்.

பண்டிதர் சபாபதி என்பவர் மட்டக்களப்பு தந்த சிறந்த கல்விமான். இலக்கியவாதி. மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் பண்டிதர் பட்டம் பெற்ற இவர் மதுரை ஆதினத்தால் கவிராஜகேசரி என்னும் பட்டம் பெற்று கௌரவிக்கப்பட்டவர். “மாரியம்மன் மான்மியம்” மற்றும் “விடுதலை வேட்கை” போன்ற நூல்களை எழுதி வெளியிட்ட இவரிடம் தமிழ் கற்க ஆரம்பித்த அதிஷ்டசாலியே தலைவர் பிரபாகரனாவார்.

இவ்வாறே தமிழ்க்கவியை கசடறக் கற்ற மட்டக்களப்பு பண்டிதர் வீட்டில் மழலைமொழி பயின்ற தலைவரிடம் தமிழ் உணர்வு குடிகொண்டதில்
ஆச்சரியமில்லை. இவ்வாறே வீட்டில் கடைக்குட்டியான செல்லம் முன்வீட்டில் பண்டிதர் குடும்பத்தின் செல்லம் என விளையாட்டும் பொழுதுபோக்குமாகக் கழித்தான் சிறுவன் பிரபாகரன். 1960ம் ஆண்டு தை மாதம் 25ம் திகதி மட்டக்களப்பு அரசடி வித்தியாசாலை (இன்றைய மஹஜனாக் கல்லூரி) தனது பாலர் வகுப்பினைப் படிக்க ஆரம்பித்தார்.

இவ்வாறு மட்டக்களப் பில் தனது ஆரம்பக் கல்வியை ஆரம்பித்த தலைவர் பிரபாகரன் 1963லேயே தனது ஒன்பதாவது வயதில் தனது சொந்த இடமான வல்வெட்டித்துறைக்கு குடும்பத்துடன் வந்து சேர்ந்து வல்வெட்டித்துறை சிவகுருவித்தியாசாலையில் தனது 3ம் தரத்தினை படிக்க ஆரம்பித்தார். இந்நிலையிலேயே வெள்ளைச்சாமியால் முதன்முதலாக புரியாத புதிராக அடையாளம் காணப்பட்டார்.

இவ்வாறு மட்டக்களப்பு தாமரைக்கேணியில் குறுக்குவீதியில் பண்டிதர் சபாபதியின் 7ம் இலக்க வீட்டில் இவர்கள் குடியிருந்த பொழுது இவர்களுடைய வீட்டிற்கு பின்புறமாக குடியிருந்தவர்களே அரியகுட்டி செல்லத்துரை ஆசிரியர் குடும்பமாகும். மட்டக்களப்பு ஆரையம்பதி 2ம் குறிச்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் மட்டக்களப்பு தாமரைக் கேணியைச் சேர்ந்த நல்லையா முதலியாரின் மகளான இராசம்மா என அழைக்கப்பட்ட அன்னப்பாக்கியத்தை திருமணம் முடித்திருந்தார். பீமன் என்னும் நாடக பாத்திரத்தில் முன்பு நடித்ததனால் இவரை பீமன் செல்லத்துரை என்றும் குறியீட்டுப் பெயராலும் அழைப்பர்.(1999 இலும் தலைவர் பிரபாகரனின் தந்தையான வேலுப்பிள்ளை இந்தக் குறியீட்டுப் பெயரையே பயன்படுத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது.)

நான்கு பெண்பிள்ளைகளும் இரண்டு ஆண் பிள்ளைகளையும் கொண்ட இவர்களிருவருமே வெலிமடை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் ஆசிரியராகத் தொழில் புரிந்து வந்தனர்.

இந்நிலையிலேயே 1958 மே 26ம் திகதி ஆரம்பித்த அப்பாவித் தமிழர்களின் மீதான கொடூரத்தாக்குதல் வேளையில் தனது நண்பர்களான வேலுச்சாமி மற்றும் தங்கவேல் என்பவர்களுடன் வெலிமடையிலிருந்து புறப்பட்டு பதுளை வழியாக மட்டக்களப்பை நோக்கி காரில் வந்து கொண்டிருக்கும்போது மாஓயா என்னும் இடத்தில் சிங்கள இனவெறியரால் படுகொலை செய்யப்பட்டார்.

மலையகத்தைச் சேர்ந்த ஒரு சிங்கள வியாபாரி மட்டக்களப்பில் கொலை செய்யப்பட்டார் எனப்பரவிய வதந்தியைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் கொழுந்து விட்டெரிய ஆரம்பித்தது ஆனால் நடந்த கொலை இனரீதியானது அல்ல அது தனிப்பட்டகொலை…. நடந்தது இதுதான்.

“செனிவிரட்ணா” இவர் நுவரெலியாவின் முன்நாள் மேயராவார். இவர் பின்நாட்களில் அரசியலைக் கைவிட்டுவிட்டு மட்டக்களப்பிற்கு வந்து
தென்னந்தோட்டமொன்றைக் கொள்வனவு செய்து அங்கேயே வாழ்ந்து வந்தார்.

அக்காலத்தில் அங்கிருந்த உள்ளூரைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் அவருக்கு கூடாவொழுக்கம் உரு வாயிற்று இதை அறிந்ததும் அப்பெண்ணின் கணவர் செனிவிரெட்ணாவை 25 மே 1958ல் சுட்டுக்கொன்று விட்டார்.

செனிவிரட்ணாவின் உடலை மட்டக்களப்பில் இருந்து பதுளை வழியாக நுவரெலியாவிற்கு கொண்டு செல்லும் வழியில்தான் சிங்களவனை தமிழன் சுட்டுக்கொன்று விட்டான். ஏனப் பிரச்சாரம் பரவியது. இதனைத் தொடர்ந்து பற்றியெரிந்த இனத்தீ தமிழர் களுக்கு எதிரான பாரிய இனப்படுகொலையாக மாற்றமடைந்தது.

அப்பாவித்தமிழ் மக்கள்மீதான கொடூர சிங்கள இனவெறித் தாக்குதலில் குறிப்பாகத் தெனிலங்கை நகரங்களான மட்டக்களப்பு, பொலன்நறுவை, அம்பாறை, இங்கினியாகல, கல்லோயா போன்ற இடங்களும் பதுளை போன்ற மலையக நகரங்களுமே ஆரம் பத்தில் பாதிப்பிற்கு உள்ளாகின.

இவைகளைத் தொடர்ந்து காலி, பாணந்துறை, கொழும்பு என நாடளாவிய ரீதியில் இக்கலவரம் கோரத்தாண்டவம் ஆடியது இங்கு குறிப் பிடத்தக்கது.

1958 வைகாசி மாதம் 27ம் திகதி செவ்வாய்க்கிழமை இவ்வாறு செல்லத்துரை ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டபோது வெலிமடையில் அவரது மனைவியான ஆசிரியை இராசம்மா 4 பிள்ளைகளுடன் தங்கியிருந்த அவர்களது வீடு சிங்கள இனவெறியினரால் தாக்கி எரிக்கப்பட்டது. அத்தாக்குதலில் இருந்து தனது சிறுபிள்ளைகளுடன் தப்பியோடிய திருமதி அன்னப்பாக்கியம் பின்பு எப்படியோ மட்டக்களப்பிற்கு வந்து சேர்ந்தார்.

பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியையரன இவர் மட்டக்களப்பில் தனது தாயாருடன் இருந்த ஏனைய இரு குழந்தைகளுடன் இணைந்து தாமரைக்கேணியில் வேலுப்பிள்ளை குடும்பம் இருந்த வீட்டிற்குப் பின்புறமாக தமது வாழ்க்கையைத் தொடர்ந்தனர்.

ஆறு குழந்தைகளுடனும் தனது ஆசிரியத் தொழில்மூலம் கிடைத்தசொற்ப வருவா யில் மிகுந்த பொருளாதார சிக்கலில் வாழ்ந்தபோதும் தனது
அயலவர்களுடன் நல்ல உறவைத் தொடர்ந்து பேணிவந்தார். இதன்மூலம் அயலவர்களும் உறவினர்களும் இவரின் நிலை கண்டு உதவி புரிந்தே வந்தனர்.

மிகவும் சுவாரசியமாகவும் தத்ரூபமாகவும் உரை யாடக்கூடிய இவர் அடிக்கடி நமது மேதகு தலைவர் பிரபாகரன் வீட்டிற்கு வந்து தலைவரின் தாயான பார்வதிப்பிள்ளையுடன் உரையாடுவதுடன் அந்நேரங்களிலெல்லாம் சிங்கள இனவெறியால் தனக்கு நேர்ந்த அவலத்தையும் கண்ணீர் மல்கக்கூறி ஆறுதலடைவதும் வழக்கம்.

மற்றவர்களுடன் உரையாடும்போது அவர்களின் பேச்சில் இடையூறு செய்யாமல் அமைதியாகக் அதனைக்கேட்டு உள்வாங்கிக்கொள்வது தாயாரிடமிருந்து தேசியத்தலைவர் பெற்றுக்கொண்ட அருங்கொடையாகும்.

இவ்வாறாக நான்கு வயதிலிருந்து எட்டு வயதுவரை தாயாருடன் கூட இருந்து அன்னப்பாக்கியம் ரீச்சரின் ஆதங்கத்தை செவிமடுத்த தலைவரின் பிஞ்சு மனதில் அந்தத் தாயின் சோகமும் அதற்குக் காரணமான சிங்கள இனவெறியும் ஆழப்பதிந்து கொண்டன.

அன்று பிஞ்சு மனதில் பட்டகாயம் பின்பு அவர் வளர வளர சிங்கள இனவெறியின் பல்வேறு முகங்களும் இனவாத அடக்குமுறையினூடாகவே நடக்கின்றன என அவர் புரிந்து கொண்டபோதும் சிறு  வயதில் மட்டக்களப்பில் தாமரைக்கேணியில் சந்தித்த அந்த விதவைத்தாயையும் அவரின் சோகத்தையும் எக்காலத்திலும் தலைவரால் மறக்கமுடிய வில்லை.

1963இல் மட்டக்களப்பைவிட்டு அவர் வெளியேறிவிட்ட போதும் 1984ல் முதன் முதலாக இந்தியாவின் பிரசித்தமான `SUNDAY` ஆங்கில வார ஏட்டிற்கு பேட்டி ஒன்றை வழங் கியிருந்தார். 1973 மார்ச் 23ம் திகதி அதிகாலை பஸ்தியாம்பிள்ளை குழுவினர் இவர் வீட்டைச் சுற்றிவளைத்து இவரைக் கைது செய்ய முயன்றபோது சுவரேறித் தப்பிக் கொண்ட இவருடைய 11 வருட தலைமறைவு வாழ்க்கையின் பின் 11, 17 மார்ச் 1984 அன்று இப்பேட்டி பிரசுரமானது.

பிரபல பெண் பத்திரிகை நிருபரான அனிதா பிரதாப்பின் 46 கேள்விகளுக்கு விரி வாகத் தலைவர் வழங்கிய பதில்கள் மூலம் தமிழீழவிடுதலைப் புலிகளினதும் தன்னைப் பற்றியதுமான பலவிடயங்களை முதன் முதலாகப் பகிரங்கமாகத் தெளிவுபடுத்தியிருந்தார்.

இந்தச் செவ்வியின் இரண்டாவது கேள்விக்கான பதிலிலேயே தனது உள்ளத்தில் பதிந்திருந்த விதவைத்தாயான இராசம்மாவினை நினைவு கூர்ந்தே அவருடைய பதில் பின்வரு மாறு அமைந்துள்ளமையை நாம்காணலாம்.

கேள்வி : இலங்கைத் தமிழர்களுக்கு ஆயுதப்போராட்டமே ஒரு வழியென்று நீங்கள் தீர்க்கமான முடிவிற்கு நிர்ப்பந்தித்த அனுபவங்களை சற்றுக் கூறுவீர்களா? கல்வி,வேலை வாய்ப்பு ஆகியவற்றில் இலங்கை அரசு காட்டிய பாரபட்சமான கொள்கையால் நீங்களோ உங்கள் குடும்பத்தவரோ அல்லது உங்கள் நண்பர்களோ நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளார்களா?

பதில் : நான் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது 1958ம் ஆண்டின் இனக்கலவரங்களில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் என் மனதில் ஆழமான
பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இனவெறியர்களால் எம்மக்கள் ஈவிரக்கமில்லாது குரூரமாகக் கொல்லப்பட்ட நெஞ்சை உருக்கும் சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன். எங்கள் குடும்பத்திற்குத் தெரிந்த ஒரு விதவைத்தாயை நான் ஒரு முறை சந்தித்தபோது (அவர் இந்த இனவெறியாட்டத்தால் தனக்கு நேர்ந்த துயர அனுபவங்களை என்னிடம் சொன்னார்.)

இனக்கலவரத்தின்போது சிங்களக்காடையர்கள் அவர் வீட்டைத்தாக்கினார்கள். அவருடைய வீட்டிற்குத் தீவைத்து அவரது கணவரையும் குரூரமாகக் கொலைசெய்தனர். அவரும் அவருடைய பிள்ளைகளும் பலத்த எரிகாயங்களுடன் தப்பினார்கள். அவரின் உடலில் காணப்பட்ட எரிகாயத் தழும்புகளைப் பார்த்தபோது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். கொதிக்கும் தாருக்குள் சிறு குழந்தைகளை உயிருடன் வீசிக் கொன்ற கோரச் சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன்.

அநாதரவான அப்பாவித்தமிழர்கள் எவ்வாறெல்லாம் கொடூரமான தாக்குதலுக்கு இலக்காகினர் என்பதை எல்லாம் கேட்கும்போது எம்மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் ஏற்படுகின்றது. இந்த இனவெறி அமைப்பின் பிடிக்குள்ளிருந்து எம்மக்களை மீட்டெடுக்க வேண்டுமென பெரும் உந்துதல் எனக்குத் தோன்றியது.

நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இந்த அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியுமென நான் ஆழமாக உணர்ந்தேன்.

இவ்வாறே அன்று தலைவர் பிரபாகரன் கண்ட மட்டக்களப்புத் தாயின் கண்ணீர்த் துளிகளே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூல ஊற்றாகி
உலகமெல்லாம் பொங்கிப் பிரவாகிக்கும் ஓயாத அலைகளாக பின்பு உருவெடுத்தன.








No comments:

Post a Comment