Thursday, April 29, 2010

பார்வதியம்மாள் விவகாரம் – தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும்..! மத்திய அரசு கைவிரிப்பு..!














பார்வதியம்மாளை தமிழகத்திற்குள் அனுமதிக்காமல் திருப்பியனுப்பிய கடிதம் விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் நிலையைப் பொறுத்தே அவருக்கான அனுமதி விவகாரத்தில் முடிவெடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மருத்துவச் சிகிச்சைக்காக தமிழகம் வந்த பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளை திருப்பியனுப்பியதை எதிர்த்து வழக்கறிஞர் கருப்பன் சென்னை ஐகோர்ட்டில் பொது நலன் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

“அதில், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கடந்த 16ஆம் தேதி மலேசியாவில் இருந்து சென்னை வந்த பார்வதி அம்மாளை குடியுரிமை அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.  விசா உள்ளிட்ட உரிய அனுமதியுடன் தாயகம் வந்த பார்வதி அம்மாளை, இந்தியாவுக்குள் அனுமதிக்காதது சர்வதேச மனித உரிமை மீறலாகும். இதனால் இந்திய மத்திய அரசு, பார்வதி அம்மாளை தனி விமானம் மூலம் மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்து தனது சொந்தச் செலவில் சிகிச்சையளிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் தர்மாராவ், கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு வக்கீல் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன் ஆஜராகி வாதாடுகையில், “பிரபாகரனின் தந்தை வேலுபிள்ளை மற்றும் தாய் பார்வதி அம்மாள் ஆகியோரை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு கடந்த 2003-ம் ஆண்டு அப்போதைய ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு கடிதம் எழுதியது. அதன் அடிப்படையிலேயே பார்வதி அம்மாள் அனுமதிக்கப்படவில்லை. தற்போதைய தமிழக அரசு அந்தக் கடிதத்தினை திரும்பப் பெறும்வரையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசினால் எதுவும் செய்ய முடியாது” என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 2003-ம் ஆண்டு எழுதப்பட்ட கடிதம் தொடர்பாக தமிழக அரசின் தற்போதைய நிலை என்ன என்பதை நாளைக்குள் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று  தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.


No comments:

Post a Comment