Tuesday, April 27, 2010

சர்ச்சையில் சிக்கியது விஜய்யின் காவல்காரன்..!














பொதுவாக வேற்றுமொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு ஒரு திரைப்படத்தை ரீமேக் செய்யும்போது முறைப்படி அனுமதி வாங்கிக் கொண்டுதான் ஆரம்பிப்பார்கள். இல்லையெனில் சினிமா அமைப்புகளாலேயே அது தடை செய்யப்படும் என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான்.

இதனால் சின்ன தயாரிப்பாளர்களில் இருந்து பெரிய நடிகர்கள்வரையிலும் பக்காவாக ஒப்பந்தங்களை முடித்துவிட்டுத்தான் பூஜையே போடுவார்கள்..!

ஆனால் இப்போது இளைய தளபதி விஜய் நடித்துக் கொண்டிருக்கும் ‘காவல்காரன்’ படம் தயாரிப்பாளரின் அனுமதி இல்லாமலேயே தமிழில் தயாராகி வருவதாக பிலிம் சேம்பருக்கு புகார் வந்துள்ளதாம்.

‘காவல்காரன்’ படத்தின் ஒரிஜினல் மலையாளப் படமான ‘பாடிகார்ட்’. இந்தப் படத்தில் திலீப், நயன்தாரா, தியாகராஜன் ஆகியோர் நடித்திருந்தார்கள். சித்திக் கதை எழுதி இயக்கியிருந்தார். ஜானி சகாரி தயாரித்திருந்தார்.

ஆரம்பத்தில் இந்தப் படத்தின் மொழி மாற்ற உரிமை முழுவதும் தயாரிப்பாளரிடம்தான் இருந்துள்ளது. படம் வெளியான நேரத்தில் ஏற்பட்ட பணச்சிக்கலால் தயாரிப்பாளர் ‘கோகுலம் சிட்பண்ட்’ நிறுவனத்தில் 4 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். அந்தக் கடனுக்கு ஈடாக ‘பாடிகார்ட்’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ‘கோகுலம் சிட்பண்ட்’ நிறுவனத்திற்கு எழுதிக் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் ஜானி.

ஆனால் கதை ஆசிரியரான சித்திக்கோ “நான் மலையாளத்தில் படத்தினைத் தயாரிக்க மட்டுமே ஜானியுடன் ஒப்பந்தம் செய்திருந்தேன்.. மற்ற மொழி உரிமைகள் அனைத்தும் என்னிடம்தான் உள்ளது. நான் யாருக்கும் எழுதிக் கொடுக்கவில்லை. விற்கவில்லை..” என்று சொல்லி இப்போது ‘காவல்காரனை’ மும்முரமாக படமாக்கிக் கொண்டிருக்கிறார்.

தயாரிப்பாளர் கொடுத்த படத்தின் ரைட்ஸை நம்பி கடன் கொடுத்திருக்கும் ‘கோகுலம் சிட்பண்ட்’ இது பற்றி பல முறை பஞ்சாயத்து செய்தும் முடியாமல் போய் கடைசியாக பிலிம் சேம்பரில் தற்போது புகார் செய்திருக்கிறது.

இதேபோல் தயாரிப்பாளர் ஜானி சகாரியும், இயக்குநர் சித்திக் மீது புகார் கொடுத்திருக்கிறார். சித்திக்கோ மிக கூலாக “ஜானி அப்படித்தான் சொல்வார்.. எங்களுக்குள் மொழி மாற்றம் சம்பந்தமாக எந்த ஒப்பந்தமும் இல்லை..” என்று சொல்கிறார்..!

இதில் யார் சொல்வது உண்மை என்பது தற்போதைக்குத் தெரியவில்லை என்றாலும், விஜய்யின் இந்தப் படம் முதல் முறையாக கதை விஷயத்திலேயே பரபரப்பாகியிருக்கிறது..!

இனி எல்லாமே பிலிம் சேம்பரின் கையில்தான்..!

No comments:

Post a Comment