Thursday, April 29, 2010

குஷ்பூ வழக்கு - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் முழு விபரம்..!

நடிகை குஷ்புவுக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, “திருமணத்துக்கு முந்தைய `செக்ஸ்' உறவு சட்டபூர்வ குற்றம் அல்ல” என்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

திருமணத்துக்கு முன்பு பெண்கள் பாதுகாப்பான `செக்ஸ்' உறவு கொள்வது தவறு இல்லை என்று, பிரபல நடிகை குஷ்பு கருத்து தெரிவித்து இருந்தார். கடந்த 2005-ம் ஆண்டில் வெளியான குஷ்புவின் இந்த கருத்து தமிழ்நாட்டில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.



அவருக்கு எதிராக பல்வேறு கோர்ட்டுகளில் 22 வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன. அந்த வழக்குகளை தள்ளுபடி செய்யவேண்டும் என்ற குஷ்புவின் கோரிக்கையை சென்னை ஐகோர்ட்டு நிராகரித்துவிட்டது. அதை எதிர்த்து குஷ்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்டது.

தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் நீதிபதிகள் தீபக்வர்மா, பி.எஸ்.சவுகான் ஆகியோரைக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து நேற்று முன் தினம் தீர்ப்பு கூறியது. குஷ்புவுக்கு எதிராக தொடரப்பட்ட 22 வழக்குகளையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

"பேட்டி ஒன்றில் குஷ்பு தெரிவித்த சொந்த கருத்துக்கு எதிராக கோர்ட்டில் கிரிமினல் வழக்கு தொடருவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. தனிப்பட்ட முறையில் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் குஷ்புவின் கருத்து அமையவில்லை. இந்த வழக்குகள் உள்நோக்கம் கொண்டவை'' என்று, நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தனர்.

3 நீதிபதிகள் கொண்ட `சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச்'சுக்காக நீதிபதி சவுகான் தீர்ப்பை எழுதி இருந்தார். தீர்ப்பு முழு விவரம் வருமாறு-

"திருமணத்துக்கு பிறகே `செக்ஸ்' உறவு என்பது நமது சமுதாயத்தின் பிரதான கருத்தாகும். அதே நேரத்தில், திருமணம் ஆகாமலேயே பரஸ்பரம் சம்மதத்துடன் உறவு வைத்துக்கொள்வது சட்டப்படி கிரிமினல் குற்றம் அல்ல என்று, இந்திய தண்டனை சட்டம் 497-வது பிரிவில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

சாதாரணமாக தனது கருத்துக்களை வெளியிடும் ஒருவரை தண்டிப்பது குற்றவியல் சட்டத்தின் பணி அல்ல. அது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானதாகும். சட்டபூர்வமான குற்றம் இழைத்ததற்கான ஆதாரங்களை புகார்தாரர்கள் தாக்கல் செய்தால் மட்டுமே, வழக்கு தொடர்வதற்கான நடைமுறைகளை மாஜிஸ்திரேட்டுகள் தொடங்க வேண்டும்.

தவறான, சாரமற்ற புகார்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அது குற்றம் சாட்டப்பட்டவருக்கு கொடுமை இழைப்பதாகிவிடும். நடிகை குஷ்புவுக்கு எதிரான புகார்கள், உள்நோக்கத்துடன் அரசியல் கட்சி நிர்வாகிகள் சார்பில் கூறப்பட்டு இருப்பதால், குற்றவியல் நடைமுறை சட்ட அமைப்பை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

ஆங்கில பத்திரிகைக்கு குஷ்பு அளித்த பேட்டியில் தெரிவித்த கருத்துகள் ஆபாசமானவையோ நற்பண்புகளுக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவோ இல்லை. திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் உறவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருக்கிறார், அவ்வளவுதான்.

எந்த ஒரு தனி மனிதருக்கோ, கூட்டாக பலருக்கோ அல்லது ஒரு அமைப்புக்கோ அந்த கருத்தை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடும் நோக்கில் அதை அவர் தெரிவிக்கவில்லை. அவதூறு வழக்கு சட்ட பிரிவின் கீழும் அவருடைய கருத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது.

அதே நேரத்தில் குஷ்புவின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது உண்மைதான். திருமணத்துக்கு முந்தைய உறவு, சேர்ந்து வாழ்வது போன்ற சர்ச்சைகள் எழும்போது அதுபற்றி வெளிப்படையாக விவாதிக்கும் கலாசாரம் வேண்டும்.

திருமண பந்தம் என்பது இந்தியாவில் முக்கியமான சமூக சம்பிரதாயம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. அதேபோல் சில தனி நபர்கள் மற்றும் அமைப்பினர் அதற்கு எதிரான கருத்துக்களையும் கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். தனிநபர் சுதந்திரத்தில் குற்றவியல் சட்டத்தை அவசியமின்றி பயன்படுத்த முடியாது.

குஷ்புவின் கருத்தில் புகார்தாரர்களுக்கு ஆட்சேபனை இருந்தால், அதே வழியில் அவர்களும் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் மூலம் தங்கள் பதில் கருத்துக்களை தெரிவித்து இருக்கலாம். அதற்காக கிரிமினல் வழக்கு மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை இல்லை. குஷ்புவின் கருத்து இளைஞர்களுக்கு தவறான வழிகாட்டிவிடும் என்ற வாதத்தை ஏற்க முடியாது.

"திருமணத்துக்கு முந்தைய உறவுகள் அதிகரித்து வருவதால், இருவருடைய சம்மதத்துடன் நடைபெறும் அத்தகைய உறவுகளை சமூகரீதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் குஷ்புவின் கருத்தே தவிர, எல்லா வகையான `செக்ஸ்' தொடர்புகளுக்கும் அவர் பகிரங்கமாக ஆதரவு தெரிவிப்பதாக அர்த்தம் அல்ல.

குஷ்புவின் கருத்தை அப்படி தவறாக கருத வேண்டும் என்றால், `செக்ஸ்' தொடர்பாக வெளியிடப்படும் பல்வேறு செய்தி, கட்டுரைகளுக்காக எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களையெல்லாம் கிரிமினல் குற்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும். இதை அமல்படுத்தவது நடைமுறைக்கு சாத்தியமானது அல்ல.

ஒரு வாதத்திற்காக, குஷ்புவின் கருத்து, திருமணத்துக்கு முன்பு உறவு கொள்ள சில இளைஞர்களை தூண்டுவதாக கருதினாலும், அந்த செயல் கிரிமினல் குற்றம் அல்ல என்பதால் சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது''.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

நடிகை குஷ்பு வழக்கு விசாரணையின்போது, திருமணத்திற்கு முன்பு சேர்ந்து வாழ்வது குறித்து நீதிபதிகள் சில கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.

அந்த கருத்துக்களை நீதிபதிகளின் உத்தரவு என்று கருதி, அதற்கு எதிராக ஏராளமான பொதுமக்கள் சுப்ரீம் கோர்ட்டிற்கு கடிதங்களை அனுப்பினார்கள். சிலர் அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யும்படி கோரி இருந்தனர். சில கடிதங்களில், பாரதத்தின் புராண இலக்கியங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தன.

தீர்ப்பில் இந்த தகவலை வெளியிட்ட நீதிபதிகள், பத்திரிகை மற்றும் டி.வி. ஊடகங்களில் வெளியான செய்திகளை பார்த்துப் இந்த கடிதங்களை பொதுமக்கள் எழுதி இருப்பதாக தெரிவித்தனர். எனவே, “இது போன்ற செய்திகளை வெளியிடும்போது பத்திரிகை மற்றும் ஊடகங்கள், மேலும் கவனமாகவும், பொறுப்பு - எச்சரிக்கை உணர்வோடும் வெளியிட வேண்டும்” என்றும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

2 comments:

  1. சுறா ரெட்டைச்சுழி என எல்லா புதுப் படங்களையும் இலவசமாக பார்க்க...

    http://sagotharan.wordpress.com/2010/05/07/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%ae%be/

    ReplyDelete
  2. சுறா ரெட்டைச்சுழி என எல்லா புதுப் படங்களையும் இலவசமாக பார்க்க...

    http://sagotharan.wordpress.com/2010/05/07/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%ae%be/

    ReplyDelete