
Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts
Saturday, October 9, 2010
Wednesday, October 6, 2010
Monday, October 4, 2010
Thursday, September 30, 2010
Saturday, September 25, 2010
Wednesday, September 1, 2010
ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! இரா.துரைரத்தினம்
Monday, August 23, 2010
Wednesday, August 18, 2010
சுவிற்சர்லாந்திற்குள் காலடி வைத்துள்ள சிவந்தனின் மனிதநேய நடை பயணம்
Thursday, July 22, 2010
கறுப்பு ஜுலை 83 - ஒரு அனுபவப் பகிர்வு

ஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதாரரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழி ரீதியாகவும் நயவஞ்சகமாகவும் நேரடியாகவும் நசுக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும், அவற்றுக்கெதிராக அவ்வப்போது சில அரசியல் தலைவர்களது குரல் ஒலிப்பதும், சில அற்பசொற்ப சலுகைகளுக்காக அடங்கிப்போவதும் நாம் கண்ட, காண்கிற அனுபவங்களானாலும், தமிழினத்தை தன்னிலைபற்றிச் சிந்தித்து, தனக்கென ஒரு நாடு தேவை என்ற தீர்வைக் கொடுத்தது என்னவோ, சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரது ஆட்சிக் காலத்தில் அமுல்படுத்தப்பட்ட `தரப்படுத்தல்" என்ற தமிழ் மாணவரது கல்வியை நசுக்கும் செயல்தான் என்பதை எவராலுமே மறுக்கமுடியாது.
தரப்படுத்தல் சிவகுமாரன் போன்ற மாணவர்களை அகிம்சை வழியிலிருந்து விலகி ஆயுதங்கள் பக்கமாகச் சிந்திக்கத் தூண்டியது. அரச பயங்கரவாதச் சுரண்டல்களுக்குப் பரிகாரம் ஆயுதப் போராட்டமே என்ற எண்ணம் பல இளைஞருள்ளும் எழுந்தது. ஆனால் துணிவாக முன்வந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையினரே. அதுவும் அவர்களால் வெளிப்படையாக தம்மை இனங்காட்ட முடியவில்லை. ஏனெனில் அந்த இளைஞர்களின் செய்கைகளை அங்கீகரிக்கும் மனப்பக்குவம் பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு இருக்கவில்லை.
இந்த நிலையில்தான் ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு இருபத்திமூன்றாம் திகதி திருநெல்வேலி மண் ஈழத் தமிழினத்தின் போராட்டத்தைப்பற்றிச் சிந்திக்காத மனப்பான்மைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.திருநெல்வேலியில் பதின்மூன்று சிங்கள இராணுவத்தினர் அழிக்கப்பட்ட செய்தி கேட்ட தூங்கிக் கிடந்த ஈழத் தமிழினம் சோம்பல் முறித்துக்கொண்டது. அரச படை இயந்திரங்களை எதிர்த்துப் போரிட முடியுமா என்ற கேள்வியே ஈழத் தமிழினத்தால், குறிப்பாக தமிழின அரசியல் மேடைப்பேச்சுத் தலைவர்களால் நினைத்துப்பாராததொன்றாக இருந்தவேளையில், திருநெல்வேலித் தாக்குதல் ஒரு விடிவெள்ளியாகியது.
ஈழத்தமிழனின் கல்வியில் திணிக்கப்பட்ட தரப்படுத்தலானது இளைஞர்களை ஆயுதங்கள் பக்கமாகச் சிந்திக்கத் தூண்டியதென்றால், திருநெல்வேலி தாக்குதலும் அதைத் தொடர்ந்து எழுந்த அரச பயங்கரவாத ஆதரவுடன் இடம்பெற்ற இனக்கலவரமும் போராட்ட அமைப்புகளின் தீடீர் வளர்ச்சிக்கு அல்லது திடீர் வீக்கத்துக்கு வழிவகுத்தது.
ஆயித்துத் தொளாயிரத்து எண்பத்து மூன்றாம் ஆண்டு யூலைக் கலவரமானது பெரும்பாலான ஈழத் தமிழர்களுக்கு ஒவ்வொருவிதமான அனுபவத்தைக் கொடுத்திருக்கும். அந்தவகையில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இங்கே இரைமீட்க விரும்புகிறேன்.
அப்போது நான் கொழும்பில் தெமட்டகொட என்ற இடத்தில் ஒரு சிங்கள வீட்டு அறையொன்றில் வாடகைக்கு குடியிருந்தேன். மருதானையில் அமைந்துள்ள `தில்லீஸ் குறூப்" என்ற நிறுவனத்தின் கணக்குப் பகுதியில் கடமையாற்றிக்கொண்டிருந்தேன்.
`தில்லீஸ் குறூப்"பின் கீழே பல வியாபார ஸ்தாபனங்கள் இயங்கின. அவற்றில் ஒன்று கல்கிசை என்னும் இடத்தில் கடற்கரையை அண்மித்திருந்த `தில்லீஸ் பீச் ஹோட்டல்" என்ற வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் தங்கும் நட்சத்திர ஹோட்டலாகும். அன்று 1983 யூலை 23ம் திகதி என்று நினைக்கிறேன். அதாவது இனக்கலவரத்துக்கு முதல்நாள். சில கணக்குச் சம்பந்தமான அலுவல்களுக்காக அங்கே சென்றுவிட்டு வீடு திரும்ப இரவு எட்டு மணியாகிவிட்டது. கல்கிசையில் இருந்து தெமட்டகொட வரவேண்டுமானால் 154 இலக்க வஸ் எடுக்கவேண்டும்.
அந்த வஸ் பொரளை என்ற இடத்தினூடாக தெமட்டகொடவுக்கு செல்லும். வஸ் பொரளையை அண்மித்தபோது அதன் வேகம் குறைந்தது. அது பொரளையில் கனத்தை மயானம் அமைந்துள்ள பகுதி. அங்கே பெருந்திரளான மக்களும் பொலீசாரும் திரண்டிருந்தார்கள். வாகனங்கள் அதற்கப்பால் செல்ல இயலாதவாறு ஒரே சன நெரிசல். திருநெல்வேலியில் பலியான இராணுவச் சடலங்கள் கனத்தை மயானத்தில் அடக்கம் செய்யப்பட இருந்ததால்தான் அந்தச் சனத்திரள் என்பதை மறுநாள்தான் என்னால் அறியமுடிந்தது. பஸ் வண்டி வேறொரு பாதை வழியாக தெமட்டகொடவை அடைய, வீடு செல்லக்கூடியதாக இருந்தது.
மறுநாள் காலை ஏழு மணியிருக்கும். வீட்டு உரிமையாளர் அவசரமாக அறைக்கதவைத் தட்டும் சத்தம்கேட்டு எழுந்தேன். அந்த சிங்களவர் தலையில் கையை வைத்தவாறு, `தெமட்டகொட சந்தியிலுள்ள தமிழ்க் கடைகள் யாவும் அடித்து நொறுக்கப்படுகிறதென்றும், பெரிய பிரச்சினை ஒன்று கொழும்பில் ஆரம்பமாகிவிட்டது" என்றும் கூறி, என்னை வெளியே போகாமல் பாதுகாப்பாக இருக்குமாறு சொல்லிவிட்டு சென்றார்.
ஒரு மணித்தியாலம் கழிந்திருக்கும். வெளியே சென்ற வீட்டு உரிமையாளர் வியர்த்து விறுவிறுக்க வந்தார்.
`தமிழர்களை வைத்திருக்கிற சிங்களவர்களுடைய வீடுகளையும் எரிக்கிறார்களாம். அதனால் நீ இங்கிருப்பது எங்களுக்கு பயமாக இருக்கிறது" என்றார்.
மாதக் கடைசி. கையில் பணமில்லை.
வேலைத்தலத்தில் பணம் கேட்டுப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் மருதானையை நோக்கி விரைந்தேன். அனேகமாக வேலைக்கு ஒரு குறுக்குப் பாதை வழியாக நடந்துதான் போவேன். அந்தப் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, வேகமாக வந்த ஓட்டோ ஒன்று விக்கித்து நின்றது.
அதிலிருந்து வியர்த்து விறுவிறுத்தவாறு இரண்டு சிங்களவர்கள் இறங்கி என்னை கூப்பிட்டு, தங்களுடன் சேர்ந்து அந்த `ஓட்டோ"வை தள்ளிவிடுமாறு கூறினார்கள். கைகளில் கத்தி பொல்லுகளுடன் விழிகள் சிவப்பைக் கக்க, விகாரமான முகங்களுடன் நின்றிருந்தவர்களுக்கு நான் தமிழன் என்று அடையாளம் தெரியவில்லை. தெரிந்திருந்தால் அந்த நேரம் என்னிலையை நினைத்துப் பார்க்கவே முடியாதிருந்தது.
மனதில் பயம் தோன்றினாலும், அந்தச் சூழ்நிலையில் அவர்களுக்கு என்னை இனங்காட்டக் கூடாதென்ற நிலமையில் அவர்களுடன் ஒருவனாக அந்த `ஓட்டோ"வைத் தள்ள ஆரம்பித்தேன்.
அந்த `ஓட்டோ"வினுள் இரண்டு மூன்று பெரிய `சூட்கேஸ்கள் அரைகுறையாக திறந்தநிலையில் உடுபுடவைகளும் நகைகளுமாக வெளியே தெரிந்தன. அந்த `சூட்கேஸின்" வெளிப்பகுதி எங்கும் ஈரம் காயாத இரத்தக்கறைகள் வியாபித்திருந்து, எங்கோ ஒரு வீட்டில் தமிழுயிர்கள் அந்த இரு காடையரினால் கொடூர அவலத்துக்குள்ளாகி, தமது சொத்துக்களையும் பறிகொடுத்ததை எடுத்தியம்பின. சிலசமயம் அந்த உயிர்களும் பறிபோயிருக்கலாம்.
எனினும் என்ன பயன்?
எனது உயிர்ப் பாதுகாப்புக்காக அந்த `ஓட்டோ" தொடர்ந்து முன்னே செல்ல, கைகொடுத்துவிட்டு, கையாலாகாத்தனத்துடன் எனது வேலைத்தலத்தை நோக்கி விரையலானேன்.
அது திறக்கப்படவில்லை.
மீண்டும் வீட்டை அடைந்தேன். எனது நிலையைப் புரிந்துகொண்ட அந்த வீட்டு உரிமையாளர், கைச்செலவுக்கு சிறிதளவு பணத்தை கேட்காமலேயே தந்தார்.
எங்கே போவது? எவரிடம் உதவி கேட்பது?
யோசித்து முடிவெடுக்க முடியவில்லை.
வீதியால் செல்லும் வஸ் வண்டிகளிலிருந்து `ஜயவேவா, ஜயவேவா" என்ற பலநு}று குரலொலிகள் எழுந்து சூழ்நிலையின் பயங்கரத்தை உணர்த்திக்கொண்டிருந்தன.
வேலைக்கென வந்து மக்கள் வீதியெங்கும் கும்பல் கும்பலாக தமிழனின் அவலத்தை வேடிக்கை பார்த்தவாறு மெல்லமெல்ல நகர்ந்துகொண்டிருந்தார்கள்.
அப்போது ஒரேயொரு வழிதான் தென்பட்டது.
கல்கிசையில் அமைந்திருந்த `தில்லீஸ் பீச் ஹோட்ட"லுக்குச் செல்வது என்பதுதான். அது வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்கான `ஹோட்டல்" என்பதால், அதுவே பாதுகாப்பான இடம் என்று முடிவெடுத்தேன்.
தெமட்டகொடவிலிருந்து கல்கிசைக்குச் செல்லவேண்டும்.
பொரளையூடாகவும் போகலாம். மருதானை ஊடாகவும் செல்லலாம். கலவரம் ஆரம்பமான இடம் பொரளை என்பதால், மருதானை ஊடாகச் செல்ல ஆரம்பித்தேன். நடந்து செல்வதே பாதுகாப்பானதாகத் தோன்றியது.
மருதானை, நகரமண்டபம் எல்லாவற்றையும் கடந்து கொள்ளுப்பிட்டியை அடைந்தபோது, சில நு}று மீற்றர் முன்னால் காடையர் கூட்டமொன்று பல தமிழர் வர்த்தக ஸ்தாபனங்களைக் கொள்ளையிட்டு, அவற்றை எரித்தவாறு சென்றுகொண்டிருந்தது.
அவர்களின் பின்னால் `ஜயவேவா" என்ற கோசங்களுடன் ஒரு கூட்டம். அவர்களில் பெரும்பாலானவர்கள் வேலைக்கு வந்து, அலுவலகங்கள் திறக்காததால் திரும்பிச் செல்பவர்கள். தமிழரின்மீது நடாத்தப்படும் அராஜகங்களைப் பார்த்து வேதனைப்படும் சிங்கள மக்களும் அந்தக் கூட்டத்தில் இல்லாமலில்லை.
இராணுவத்தினர் `ட்ரக்"குகளில் பெற்றோலைக் கொண்டுவந்து அந்தக் காடையர்களுக்கு விநியோகிப்பதையும், `ஜயவேவா" என்று கத்தி உற்சாகமூட்டுவதையும் காணக்கூடியதாக இருந்தது.
பல சரக்குக் கடைகளைச் சூறையாடி அதிலிருந்த இனிப்பு, குமிழ்முனைப் பேனா போன்றவைகளை அந்தக் காடையர்கள் சனங்களை நோக்கி வீசுவதையும் அவற்றை அந்தச் சனங்கள் முண்டியடித்தவாறு பொறுக்கி எடுத்து ஆனந்தம் அடைவதையும் பார்த்தவாறு மெல்லமெல்ல அவர்களோடு ஒருவனாக நகர்ந்துகொண்டிருந்தேன்.
பம்பலப்பிட்டி என்ற பகுதியை அண்மித்தபோது காடையாரின் தொகையும், தாக்குதல்களும் மிகவும் அதிகரித்துவிட்டது. சுற்றிநிற்கும் கூட்டத்திலே எவராவது தமிழர்கள் உள்ளார்களா என நோட்டமிட ஆரம்பித்துவிட்டார்கள். சுற்றிநிற்கும் மக்களின் ஆதரவும், இராணுவத்தினரின் பெற்றோல் விநியோக உதவியும் காடையரின் உற்சாகத்தைக் கூட்ட, அவர்களின் வெறியாட்டம் உச்சகட்டத்தை அடைந்துகொண்டிருந்தது.
பம்பலப்பிட்டி சரஸ்வதி லொட்ஜ் என்ற தோசைக்குப் பெயர்பெற்ற அந்தச் சைவக் கடையின் பலகைக் கதவுகளை நொறுக்கித் திறந்து, உள்ளேயிருந்து வேட்டியணிந்த ஒரு பெரியவரை வெளியே இழுத்து வந்து ஏதோ செய்யுமாறு கட்டளையிட்டார்கள். பாவம் அந்தப் பெரியவர் அணிந்திருந்த வேட்டியைக் கழற்றி தலையில் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டு, தேகம் நடுங்க அந்தக் காலி வீதியில் மண்டியிட்டு இருகரம் கூப்பி அந்தக் காடையர்களைக் கும்பிடலானார். அருகில் உடைந்து சிதறியிருந்த அந்தக் கடைக் கதவுப் பலகையொன்றால் அவரின் முகத்தில் ஓங்கி அறைந்தான் அந்தக் காடையர்களில் ஒருவன். இரத்தம் குபீரெனப் பாய்ந்தது.
கண் முன்னால் ஒரு கொலையொன்று நிகழப்போகிறதோ என்ற பீதியுடன் உடல் உறைய நின்றிருந்தேன்.
அப்போது சில சிங்களப் பெண்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்திலிருந்து பாய்ந்து வந்து அந்த முதியவருக்கும் காடையருக்கும் இடையே ஒரு பாதுகாப்புக் கவசமாக நின்றுகொண்டு, அந்தக் காடையரைப் பார்த்து ஏசிக் கத்தினார்கள்.
அங்கே அந்தத் தமிழ் முதியவரது உயிர் பிழைத்துக் கொண்டது.
அந்தச் சிங்களப் பெண்களின் தாய்மை உள்ளத்துக்கு மனதாரத் தலை வணங்கியவாறு, மேலும் அந்த வழியால் தொடர்ந்து செல்வது புத்திசாலித்தனமல்ல என்ற முடிவுடன் கடற்கரைவழியாகக் கல்கிசையை அடையலாம் என்ற முடிவில், கடற்கரையில் அமைந்துள்ள தண்டவாளத்தின் வழியாக கல்கிசையை நோக்கி நடக்கலானேன்.
வெள்ளவத்தையில் காலிவீதியிலிருந்து கடற்கரை நோக்கி குறுக்காக அமைந்த வீதியெங்கும் ஒரே புகைமயமாகவும், மக்களின் அபயக் குரல்களாகவும் அந்த கடல் காற்றிலே கலந்துகொண்டிருந்தது.
நான் ராஜசிங்க வீதியை அண்மித்தபோது பின்னால் ஏதோ சலசலப்புக் கேட்டு திரும்பிப் பார்த்தேன்.
சில காடையர்களும், ஒரு புத்த பிக்குவும் கையில் கத்தி பொல்லுகளுடன் வந்துகொண்டிருந்தார்கள். ஆபத்து பின்னால் நெருங்குவதை உணர முடிந்தது.
ஓடினால் `தமிழன்" என்று இனங்கண்டு துரத்திப் பிடித்துவிடுவார்கள். நடையின் வேகத்தை அதிகரித்தேன்.
எனினும் கல்கிசைக்கு இன்னும் துரமிருந்தது. அப்போது வெள்ளவத்தையில் போய்க்கொண்டிருந்தேன். கல்கிசையை அடைய தெகிவளை என்னும் இடத்தையும் தாண்டியாகவேண்டும்.
கல்கிசையை சென்றடைவேன் என்ற நம்பிக்கை பின்னால் வந்தவர்களின் தொடர்தலால் மெல்லமெல்ல அகன்று கொண்டிருந்தது.
வீதி எங்கும் சிங்களப் பேரினவாதிகளின் ஆதரவுடன் அரங்கேறிக்கொண்டிருந்த ஈழத்தழிழர்மீதான அட்டூழியங்களையும், அடாவடித்தனங்களையும் நேரடியாகவே பார்த்தவாறு வந்ததால், அந்த புத்த பிக்குவுடன் பின்தொடரும் காடையர்களால் எனக்கு என்ன நேருமோ என்ற எண்ணம் என் பதட்டத்தை அதிகரித்துக் கொண்டிருந்தது.
அப்போது இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை அண்மித்துக் கொண்டிருந்தேன். அதனுள் பல தமிழர்கள் அடைக்கலமாகியிருப்பது மண்டபக் கண்ணாடிச் சுவர்களினுாடே தெரிந்தது.
அப்போது யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் பிரயாணசேவையை நடாத்திக் கொண்டிருந்த பிள்ளையார் ஸ்ரோர்ஸ் சொகுசு வஸ் ஒன்று அரைகுறையாக எரிந்து புகைய, மண்டப முன் கண்ணாடிகள் நொறுங்கிப் போயிருந்தன.
அவசர அவசரமாக உள்ளே நுழைந்துவிட்டேன். அந்தக் காடையர்களும் உள்ளே நுழைந்தார்கள். அவர்களைக் கண்டு மண்டபத்தினுள்ளே இருந்த பெண்களும் குழந்தைகளும் கூச்சலிட ஆரம்பித்தார்கள். அப்போது அந்த மிஷன் சுவாமிகள் காவியுடையுடன் முகத்தில் அமைதி தவழ, அபயக் குரலெடுத்து அலறும் அந்த அப்பாவி தமிழர்களை விலத்தியவாறு, புத்த பிக்குவின் முன்னால் வந்து நின்றுகொண்டார்.
என்னை அழித்துவிட்டு, அப்பால் சென்று உங்களின் வெறியைத் தீர்த்துக் கொள்ளுங்கள் என்னும் போக்கில் ஒரு காவியுடை தரித்த துறவி.
தமிழர்களை அழித்தே தீருவேன் என்னும் நோக்கில் இனவெறி கண்களில் தெறிக்கக் காடையருடன் இன்னொரு காவியுடை தரித்த புத்த துறவி.
இரண்டு வேறுபட்ட குணாம்சம் பொருந்திய துறவிகள் நேரடியாகச் சந்தித்தார்கள்.
அந்த புத்த துறவிக்கு அங்கே குற்றத்தை உணரும் மனப்பக்குவம் ஏற்பட்டதோ, என்னவோ, அவர் காடையர்களை அழைத்துக்கொண்டு திரும்பிச் சென்றுவிட்டார்.
சிறிது நேரத்தில் அங்கு கூடியிருந்த தமிழ் மக்கள் யாபேருக்கும் சுடச்சுடத் தேனீர் பரிமாறப்பட்டது.
பாலைவனத்தில் ஒரு துளி நீர் கிடைத்ததுபோன்ற உணர்வெழுந்தது.
சுற்றிலும் ஒரே புகைமயமாக இருந்தது. பல தமிழர்களின் உடமைகள் சூறையாடப்பட்டும் எரியூட்டப்பட்டும் மக்கள் அநாதரவாக இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். நேரம் செல்லச்செல்ல கூட்டம் அதிகரித்துக்கொண்டிருந்தது.
குழந்தைகள் பசியால் கதற ஆரம்பித்துவிட்டார்கள். எல்லோரையுமே பசி வாட்டி வதைத்தது.
இனிமேல் என்ன நடக்கப் போகிறது, என்ன செய்யப் போகிறேன் என்பதைக் குறித்து என்னால் சிந்திக்க முடியாமல் இருந்தது.
இரவு எட்டு மணியிருக்கும்.
முன்னே பொலீஸ் ஜீப் வண்டி வர, பின்னால் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க லொறிகள் மூன்று வந்தன.அவற்றில் ஏற்றப்பட்டோம். அவை பம்பலப்பிட்டி இந்துக் கல்லுாரியைச் சென்றடைந்தன.
லொறிகளிலிருந்து பரபரப்பாக இறங்கிய அனேகர் முண்டியடித்தக்கொண்டு உள்ளே ஓடினார்கள். ஏதாவது உணவு வழங்குகிறார்களோ என்று நோட்டமிட்டேன். அப்படியெல்லாம் எதுவுமில்லை. ஒவ்வொரு வகுப்பறைகளாகத் தமக்கு இடம் ஒதுக்குவதில் ஈடுபட்டிருந்தார்கள்.
உடமைகளையும் கட்டிக்காத்த செல்வங்களையும் இழந்து அகதிகளாக அவலங்களுடன் எதிர்காலமே சூனியமாகிவிட்ட நிலையில், ஒரு வகுப்பறையின் வெறும்தரையில் கையோடு எடுத்துவந்த சில சில்லறைப் பொருட்களை வைத்து இடம் பிடிப்பதில் போட்டிபோட்டுக் கொண்டிருந்தார்கள்.இந்தப் போட்டியானது அப்போதிருந்து அகதி முகாமான பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில், ஒவ்வொரு சிறுசிறு விசயங்களுக்குமாய் சங்கிலிக் கோவையாய் பின்னிப்பிணைந்து வளர்ந்துகொண்டே சென்றது.
உறங்குவதில் இடம்தேடப் போட்டி. உணவு பெறுவதில் போட்டி. மலசல கூடம் செல்வதில் போட்டி. முகம் கழுவத் தண்ணீர் பிடிப்பதில் போட்டி. யாழ்ப்பாணம் செல்ல கப்பலுக்குப் பதிவு செய்வதில் போட்டி.
இத்தனைக்கும் மேலாக இலங்கைத் தமிழன், இந்தியத் தமிழன் என்று போட்டி. இத்தனை போட்டிகளும்அதனால் நிமிடத்துக்கு நிமிடம் உருவாகும் புதுப்புதுப் பிரச்சினைகளுமாக அகதிமுகாம் வாழ்வு வித்தியாசமான, அதேநேரத்தில் தமிழினம் எப்போது ஒற்றுமைப்படும் என்ற ஏக்கத்தையும் தந்ததென்றால் மிகையாகாது.
அழிவுகளும் அவலங்களும் ஈழத் தமிழினத்தின் சுயநல, சுகபோக தேடலை ஒருபுறமாகத் தள்ளி, விட்டுக்கொடுப்புக்களோடுகூடிய ஒற்றுமை உணர்வை வளர்த்தெடுக்குமா என்ற வினாவுக்கு ஒரு சாதகமான பதில் வெகுதொலைவிலேயே காத்திருப்பதான உணர்வு ஏற்பட்டது.
ஒரு சம்பவம்...
ஒரு யாழ்ப்பாணக் குடும்பம். பல வருடங்களாக கொழும்பு வாழ்க்கை என்பதை அவர்களது செயற்பாடுகள் எடுத்தியம்பின. அவர்களுடன் ஒரு வீட்டுப் பணிப்பெண். அப்போது அங்கே எல்லோரும் அகதித் தமிழர்கள் என்றாலும், அவர்களைப் பொறுத்தளவில் அந்த இளம்பெண் பணிப் பெண்ணாகவே நடாத்தப்பட்டாள்.
பெரியதொரு கம்பளத்தை விரித்து அதிலே உட்கார்ந்திருந்தார்கள். அந்தப் பெண் அவர்களுக்காக வரிசைகளில் நின்று தண்ணீர் என்றும் உணவென்றும், அவர்களின் உடுபிடவைகளைத் தோய்ப்பதென்றும் உழைத்துக் கொண்டிருந்தாள். இத்தனைக்கும் அவள் உணவருந்தினாளா, உறங்கினாளா என்பதைப்பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை. அவள் என்னதான் பணிவிடை செய்தாலும், அவள்மீது வசைபாடுவதிலேயே கவனமாக இருந்தார்கள்.
அவளுக்கு அந்த முகாம் வதைமுகாமானது. அதிலிருந்து விடுபட அவளுக்கு தெரிந்த வழி அவளது வாழ்க்கையையே மாற்றியது. ஆம். அவள் அந்த முகாமில் ஒரு இளைஞனை திருமணம் செய்தாள். அந்தத் திருமணம் அங்கு கடமையிலிருந்த பொலிசாரின் முன்னிலையில் நிகழ்ந்தது.
அந்த யாழ்ப்பாணக் குடும்பத்தின் அதிகாரத்துக்கு அவள் தனது திருமணத்தின் மூலம் கடிவாளமிட்டாள் என்பதுதான் யதார்த்தம்.
இந்த ஆடிக்கலவரத்தை கறுப்பு யூலை என்கிறார்களே. இந்தக் கறுப்பு யூலையானது சிங்களப் பேரினவாதத்தால் தமிழினத்தின்மீது வாரியிறைக்கப்பட்ட கறுப்பா? அல்லது தமிழர் மனங்களில் ஆழப் புதைந்திருக்கும் கறுப்பை அகற்ற வந்த யூலையா?
யாழ்ப்பாணத்துக்கு சரக்குக் கப்பலில் செல்லவென கொழும்புத் துறைமுகத்தில் நானும் சில நண்பர்களும் நின்றிருந்தோம்.
பசித்தது.
துறைமுகத்தில் சாப்பாட்டுப் `பார்சல்"களை சிலர் மலிவு விலையில் விற்பதுண்டு. அங்கு கடமையிலிருந்த இரு சிங்கள இளைஞர்களிடம் விசாரித்தோம்.
அவர்கள் உடனே விரைந்து சென்று சில சாப்பாட்டு பார்சல்களை எடுத்துவந்து தந்தார்கள்.
பணத்தைக் கொடுத்தபோது வாங்க மறுத்தார்கள்.
`இது நாங்கள் சாப்பிட வைத்திருந்தவை. இந்தக் கலவரத்துக்காக நாங்கள் கவலைப்படுகிறோம். இங்கு எல்லா மக்களும் சமமாக வாழவேண்டும் என விரும்புகிறோம். நீங்கள் மீண்டும் கொழும்புக்கு வரவேண்டும். அதுதான் எங்களுடைய விருப்பம்."
அவர்கள் கூறிக்கொண்டே போனார்கள்.
நாங்கள் அவர்களிடம் விடைபெற்று கப்பலில் ஏறினோம்.
கப்பல் காங்கேசன்துறையை நோக்கி நகர ஆரம்பித்தது.
மேலதிக செய்திகளுக்கு..
ஈழப் போராட்ட வரலாறு - 6: 1953ஆம் ஆண்டின் மாபெரும் வேலை நிறுத்தம்

1952 இல் ஆட்சியமைத்த யு.என்பி.யின் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் நியோ லிபரல் கொள்கைகள் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் ஆத்திரத்தைக் கிளப்பியது. இலங்கையின் மாபெரும் வேலை நிறுத்தத்துக்கு வழிசமைத்த இந் நிதியமைச்சர் (பின்னை நாள் பிரதம மந்திரியும் ஜனாதிபதியும்) நாடு கண்ட மிக மோசமான வலதுசாரிகளிலொருவர். பொருளாதாரச் சரிவுவை ஏற்படுத்தியது, தொழிலாளர்களின் உரிமைகள் மீதான தாக்குதல்களை நிகழ்த்தியது, ஊழலை அதிகரித்தது, அரசியல் வன்முறைக் குழுக்களை வளர்த்தது, கோரமான இனவாதத்தை வளர்த்தது, தமிழ்பேசும் சிறுபான்மையருக்கு எதிரான கோர வன்முறையைத் தூண்டியது, யுத்தத்தை ஆரம்பித்தது என்று பல்வேறு அழிவுகளுக்கு வித்திட்ட நாசகார சக்திகளின் தலையாய பிரதிநிதியிவர்.
இடதுசாரிகள் மேல் இவர் காட்டிய காழ்ப்புணர்வும் வெறுப்பும் நாடறிந்தவொன்று. L.S.S.P யினர் பாராளுமன்றத்தில் அவருடன் அடிக்கடி சண்டை போட நேரிட்டது. L.S.S.P உறுப்பினர்கள் பேசும் போது ஒவ்வொரு முறையும் அத்துமீறிக் குறுக்கிட்டு அனாவசியமான தனிப்பட்ட தாக்குதல்களைச் செய்வதும் கிண்டல் கதைகள் பேசுவதும் இவர் வழக்கம். தமது அரசியல் நலனைத் தக்கவைக்க வன்முறைக் குழுக்களைத் தமக்குப் பின்னால் செயற்பட வைத்த யு.என்.பி தலைவர்களின் முன்னோடியிவர்.
ஏகாதிபத்தியம் சார் கொள்கைகளை மும்முரமாக அமுல் படுத்தியவர்களிலும் முதலிடத்தை இவருக்கு வழங்கலாம். அமெரிக்க வலதுசாரிப் பொருளாதாரவாதியான ஜோன் எக்சடரின் உதவியுடன் இலங்கையின் முதலாவது மத்திய வங்கியை உருவாக்கி அதற்கு ஜோன் எக்சடரையே கவர்னராகப் போட்டதும் இவரது கைங்கரியமே. மேற்கத்தேய மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய அரசுகளுடன் மிக நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொண்டவர்களிலும் இவரே முதன்மையானவர். கொழும்பு விமானத்தளங்களை அமெரிக்கா பயன்படுத்த வழியேற்படுத்திக் கொடுத்தவருமாவார்.
தனது கொள்கைகளை நிறைவேற்ற இடதுசாரிகள் பெருந்தடையாக இருந்தமையால் அவர்களை இவர் மனதார வெறுத்தார். அதனால் தன்னால் முடிந்த எல்லாக் குறுக்கு வழிகளிலும் அவர்களைத் தாக்கினார். ஒரு சர்வாதிகாரியின் அனைத்துக் குணாம்சம்களையும் கொண்ட இந்த நிதியமைச்சர் தன் வர்க்க நலனுக்காக நாட்டைப் பொருளாதாரக் குழப்பத்துக்குள் தள்ளினார். 1952இல் UNP வென்ற கையுடன் விவசாயிகளுக்கான நிவாரணம் நிறுத்தப்பட்டது. வறியவர்களுக்கான உணவுச் சலுகைகள் குறைக்கப்பட்டன. பண்டங்களின் விலை உயர்த்தப்பட்டது. உள்நாட்டு உற்பத்தி குறைக்கப்பட்டு இறக்குமதி அதிகரிக்கப்பட்டமையால் வெளிநாட்டுச் சேமிப்பு நிதியம் வேகமாக வற்றத் தொடங்கியது. அமெரிக்க மேற்கத்தேய நியோலிபரல் கொள்கைகள் நடைமுறைக்கு வந்தன.
1950இல் தொடங்கிய கொரியா நாட்டு யுத்தத்தின் காரணமாக இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி முடிவுக்கு வரத் தொடங்கயிருந்தது. பனியுத்தத்தின் காரணமாக இலங்கையின் மிகச்சிறந்த இயற்கைத் துறைமுகமான திருகோணமலைத் துறைமுகம் மிக முக்கியத்துவம் பெற்றது. இந்தியாவின், சோவியத் யூனியன் ஆதரவு காரணமாக அமெரிக்காவுக்குத் தெற்காசியாவில் இராணுவத்தளம் ஒன்றின் தேவை முக்கியமானது. இத்தருணத்தில் இலங்கை பண்டங்களுக்குக் கூடுதற் பணம் வழங்கிய சீனாவுடன் உறவை முறிக்கும்படி அமெரிக்கா, இலங்கை அரசுக்கு நிர்ப்பந்தம் வழங்கி வந்தது.
சில பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தி தமக்குச் சாதகமான கொள்கைகளை அமுல்படுத்தும்படி தூண்டியது. அவர்களுக்கு அடித்த அதிஷ்டமாக ஜே.ஆர் ஜெயவர்த்தனா அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிகச்சிறந்த நண்பனாக இலங்கையைக் குதறிக் குலைக்க முன்வந்தார். பல அதிகாரங்களைச் ‘சுதந்திரத்துக்குப்’ பின்னும் தம் கைவசம் வைத்திருந்த இலங்கைக்கான பிரித்தானியக் கவர்னர் இடதுசாரிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்படி தூண்டினார். அமெரிக்க- சோவியத் பனியுத்தம் இலங்கையிலும் தனது பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியது.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்வது இலாபகரமாக இருந்த போதும், அதை நிறுத்தி மேற்கிலிருந்து அதிகூடிய விலையில் பண்டங்களை இறக்குமதி செய்ய UNP அரசு முடிவு செய்தது. இலங்கைப் பொருளாதாரம் ஜெயவர்த்தனாவின் கையில் ‘குரங்கின் கை பூமாலையானது’. வறிய விவசாயிகளின் நிவாரணத்தை நிறுத்திய அதே தருணத்தில் அரசு தனியார் வியாபாரிகளுக்குச் சலுகைகளை வழங்கியது. திடமாக இருந்த இலங்கைப் பொருளாதாரம் ஒரு வருடத்திற்குள் தலைகீழானது.
ஆனால் ஆளும் வர்க்கம் இலங்கைத் தொழிலாளர்களின் சக்தியைக் குறைத்து மதிப்பிட்டு விட்டனர். அரிசி நிவாரணம் நிறுத்தப்பட்டமைக்கு எதிராக 1953ஆம் ஆண்டு யூலை 20இல் யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டத்தில் 5000க்கும் மேற்பட்ட மக்கள் பங்குபற்றினர். இக்கூட்டம் ஐந்து மணித்தியாலத்துக்கும் மேலாக நீடித்தது. அடுத்தநாள் 12 000 க்கும் மேற்பட்ட கொழும்புத் துறைமுகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.
23ஆம் திகதி யூலை வெள்ளவத்தை Spinning and waving தொழிலாளர்கள் அரைநாள் வேலை நிறுத்தத்தைக் கடைப்பிடித்தனர். கொண்டுவரப்பட இருக்கும் வரவுசெலவுத் திட்டத்திற்கெதிராக வாக்களிக்கும்படி 8760 பேர் கையெழுத்திட்ட பெட்டிசன் காங்கேசன்துறை பாராளுமன்ற உறுப்பினர் நடேசனிடம் கையளிக்கப்பட்டது. கண்டி, யாழ்ப்பாணம், கோப்பாய், ருவானவெல்ல என்று பல இடங்களில் பெரும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. வரும் ஆகஸ்ட் 6ம் திகதி பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபடவேண்டும் என்ற கோரிக்கை எல்லாக் கூட்டங்களிலும் நிறைவேற்றப்பட்டது.
இத்தருணத்தில் வலதுசாரி ஊடகங்கள் இடதுசாரிகளைத் தொடர்ந்து தாக்கின. ‘சிவப்புப்’ பயப்பீதி வதந்திகளைப் பரப்பினர். ஆகஸ்ட் 6ஆம் திகதி சோவியத்யூனியனின் தலைவர் தமது கொள்கை மாற்றம் பற்றி அறிவிக்க முடிவெடுத்திருக்கும் நாள் என்றும் அதனால் தான் இடதுசாரிகள் வேலை நிறுத்தத்துக்குத் தூண்டுகின்றனர் என்றும் வதந்திகள் பரப்பப்பட்டன. 1953 யூலை 26இல் சிலோன் வானொலியில் தொழிலாளர்களுக்குப் பின்வருமாறு ஒரு எச்சரிக்கை அனைத்து மொழிகளிலும் ஒலிபரப்பப்பட்டது. ‘ அரசுக்கெதிரான வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அல்லது அரசுக் கொள்கையை மாற்றக்கோரி ஊர்வலத்தில் , போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்கள் அனைவரும் தாமாகத் தம் வேலையிலிருந்து விலத்தி விட்டார்கள் என்று கருதப்படுவர்.
அவர்கள் மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டார்கள்’. தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதைத் தடுக்க இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டது. ஆனால் இந்த மிரட்டலுக்கு அடிபணிய மறுத்த தொழிலாளர்கள் வலதுசாரி ஊடகங்களின் சிவப்பு பயப்பரப்பலைப் புறக்கணித்து வேலை நிறுத்தப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டனர். இதை எதிர்க்க எல்லாக குறுக்கு வழிகளையும் நாடிய ஜெயவர்த்தனா ‘பொருளாதாரத்தின் பெரும்பகுதியை தமிழர்கள் எடுத்துக் கொள்வதால் தான் இந்தப் பிரச்சனை’ என்ற பிரச்சாரத்தையும் தூண்டிவிட்டார்.
வலதுசாரி வரலாற்றாசிரியர்கள் ஜெயவர்த்தனாவைப் புத்திசாலி என்று புளுகுவதையும் இலங்கைப் பாடப்புத்தகங்களில் அவர் மாபெரும் தலைவராகப் போற்றப்படுவதையும் நாமறிவோம். ஆனால் இலங்கைத் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் அவர் ஒரு ‘மாபெரும் முட்டாள்’. சமுதாயம் பற்றி ஒரு மண்ணும் தெரிந்திராத ‘மடையன்’. அவர்கள் 1953ஆம் ஆண்டு இதைத் தெட்டத் தெளிவாக ஜெயவர்த்தனவுக்கு விளங்கப்படுத்தினர்.
1947ஆம் ஆண்டு பொது வேலை நிறுத்தத்தை ஒடுக்கிய அதே வலதுசாரிக் குழு தான் இத்தருணம் ஆட்சியிலிருந்தது. வேலை நிறுத்தம் நடக்கும் பட்சத்தில் முன்பு போலவே இத்தருணமும் தாம் தொழிலாளர்களை முறியடிக்க முடியும் என்று அவர்கள் நம்பினர். இராணுவத்தைக் கொண்டு இலங்கைத் துறைமுகத்தைக் கைப்பற்றித் தொழிலாளர்களைப் பொலிஸ் பாதுகாப்பில் வேலைக்குக் கொண்டு செல்வதன் மூலம் பொது வேலை நிறுத்தத்தை முறியடிக்க அவர்கள் திட்டமிட்டனர்.
வேலை நிறுத்த முன்னெடுப்புகள் பலப்பட அதிகாரவர்க்கத்தின் பயமும் வலுப்படத் தொடங்கியது. அதன் பலனாக UNP க்குள் பல முரண்பாடுகள் வெடித்தது. ஆர்.பிரேமதாச போன்றவர்கள் ஜே.ஆரின் பொருளாதார மொக்குத்தனத்தை ஏற்றுக் கொண்டனர். இருப்பினும் பொருளாதாரப் பிரச்சனையை இடதுசாரிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர் என்று குற்றஞ் சாட்ட அவர் தயங்கவில்லை. போதாக்குறைக்கு அவர்கள், மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று மோசமான கேலிக்கிடமான வழி முறைகளைப் போதித்தனர்.
‘மக்கள் செலவற்ற மற்றும் ஆடம்பரமற்ற சாதாரண வாழ்க்கைக்குத் தம்மைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்று பிரேமதாசா கேட்டுக்கொண்டார்! விலைவாசி அதிகரிப்புக்குக் காரணமானவர்கள் தம் ‘மாளிகைகளில்’ ‘அனாவசிய செலவுகளில்’ ஈடுபட்டிருக்க வறிய மக்கள் செலவைக் குறைக்க வேண்டும் என்ற சில்லறைக் கோரிக்கைகள் தொழிலாளர்கள் மத்தியில் எடுபடவில்லை. பொது வேலைநிறுத்தத்துக்கு முதல்நாள் பிரேமதாச பின்வருமாறு ஒரு சவால் விட்டார்.
"இந்த ஆண்டின் மிகப்பெரிய பகிடியாக இந்தக் கர்த்தால் இருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. இந்தச் சிவப்புச் சட்டைகாரர்களுக்கு ஒன்றைத் துணிந்து சொல்வேன். உங்களின் கதையை மக்கள் செவிமடுக்கலாம் ஆனால் அவர்கள் நீங்கள் சொல்வதில் ஒரு சொட்டையும் நம்பப்போவதில்லை."
பிரேமதாசவின் இந்தத் ‘தீர்க்க தரிசனம்’ நிறைவேறவில்லை. அதற்கு மாறாக ஆயிரக்கணக்கில் மக்கள்-தொழிலாளர்கள் வந்தனர். செவிமடுத்தனர். செயலில் இறங்கினர். கம்யூனிச கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த சில தொழிற்சங்கங்களில் ஏற்பட்ட சிறு தாமதத்தின் பின் பொது வேலை நிறுத்தம் ஆகஸ்ட் 12இல் நிகழவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆகஸ்டு 12ல் நாடு முழுவதும் ஸ்தம்பித்தது.
தொழிலாளர்களின் ஒற்றுமையும் பலமும் LSSP தலைமைகளுக்குக் கூட ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏராளமான தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்குபற்றினர். போக்குவரத்தைத் தொடர அரசு இராணுவத்தை வரவழைத்து சாரதிகளாகப் பணியாற்ற விட்டது. கொழும்புத் துறைமுகத்தையும் இராணுவம் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தது. இதையும் மீறி நாடு காணாத அளவில் பொது வேலை நிறுத்தம் எல்லா இடங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டது. இந்தியப் பொதுத்தொழிலாளர் சங்கச் செயலாளரும் LSSPயின் முக்கிய தலைமை உறுப்பினருமான பாலத்தம்பு இந்த வேலை நிறுத்தத்தைப் பற்றி பின்வருமாறு எழுதியிருந்தார்.
‘முதலாளித்துவ அரசை எதிர்ப்பது மட்டுமல்ல அதை உடைத்து விழுத்த முடியும் என்ற பாடத்தை இந்தப் பொது வேலை நிறுத்தம் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வறிய மக்களுக்கும் கற்றுக்கொடுத்தது. தாம் நேரடி போராட்டத்தில் இறங்கும்போது ஆளும்வர்க்கத்தால் அவர்களை அசைக்க முடியாது என்பதை அவர்கள் நிரூபித்தனர். ஆகஸ்ட் 12 ஒரு மறக்க முடியாத நாள். மகரகாம, பேரளகாமுவ என்று பல இடங்களில் மாபெரும் பொதுக்கூட்டங்கள் நிகழ்ந்த நாளிது. பொலிஸ், இராணுவம் மட்டுமல்ல ஒட்டு மொத்த அதிகார வர்க்கமும் ஒன்றாகச் சேர்ந்து வந்தால் கூட அவர்கள் பலம் ஒட்டுமொத்தத் தொழிலாளர்களின் பலத்துக்கு நிகராக முடியாது என்று நிறுவிய நாளது. வேலை நிறுத்தத்தைக் காப்பாற்ற இராணுவ-பொலிசை எதிர்கொள்ளவும் தொழிலாளர் தயாராகிய – அதற்கு உயிரைக் கொடுக்கக்கூட முன்வந்து ‘கர்த்தால் கதாநாயகர்களாக’ மாறத் தொழிலாளர்கள் தயாரான நாளது.
ஆனால் அதே நாள் வலதுசாரி ஊடகங்கள் கற்பனைக் கதைகளைப் பிரசுரித்தன. ‘வழமைபோல் தொழில் நடந்தேறியது’ என்று சிலோன் டெய்லி நியூஸ் தலையங்கம் எழுதியது. ‘வழமையான சூழல் நிலவியது’ என்ற தலைப்பில் அவர்களது ஆசிரியர் தலையங்கம் எவ்வாறு வேலை நிறுத்த நாள் ஒரு சாதாரண நாளாக இருந்தது என்று வர்ணித்தது. இந்தச் ‘சாதாரண நாளில்’ அசாதாரண முறையில் UNP அமைச்சரவை அவசர அவசரமாகக் கொழும்புத் துறைமுகத்தில் நின்ற HMS Newfound land கப்பலில் கூடியது! பயக்கெடுதியில் உடனடியாக அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்திய அமைச்சரவை, தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் ஊரடங்குச் சட்டத்தையும் அமுலுக்குக் கொண்டு வந்தது.
வேலை நிறுத்த நாளைச் ‘சாதாரண நாள்’ என்று வர்ணித்த அதே பத்திரிகைகள் அடுத்த நாள் அவசர காலச் சட்டம் என்றால் என்ன என்று விளக்கவுரைகள் எழுதின. அடுத்தடுத்த நாட்களில் வலதுசாரி பத்திரிகைகள் முழுவதும் எவ்வாறு அவசரகாலச் சட்டத்தையும் மீறி நாடெங்கும் வேலை நிறுத்தம் தொடர்கிறது என்ற செய்திகளை வெளியிட்டன. வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்தும் புறக்கணித்துப் பிரச்சாரம் செய்வது அவர்களுக்கு முடியாத காரியமாகிப்போனது.
வேறு வழியின்றி அரசு ஆகஸ்டு 15இல் இராணுவத்தின் முழு உதவியையும் நாடியது. வேலை நிறுத்த நாளைச் சாதாரண நாள் என்று தலையங்கம் எழுதிய அதே பத்திரிகை லண்டன் ரைம்சை மேற்கோள் காட்டி 19 ஆகஸ்டில் தொழிலாளர்களின் அதிருப்தியைச் சரியாக பாவித்த LSSP மிக வெற்றிகரமாக வேலை நிறுத்தத்தை ஒழுங்கமைத்திருந்தது’ என்று எழுதவேண்டியதாயிற்று.
- சேனன்
தொடரும்....
நன்றி : கீற்று
ஈழப் போராட்ட வரலாறு பற்றி மேலும் படிக்க...
Monday, July 19, 2010
பிரித்தானியாவில் இருந்து ஐ.நா முன்றல் வரை நடைபயணம்

பிரித்தானியாவில் இருந்து கால்நடைப் பயணமாக சுவிஸ், ஜெனீவாவரை செல்ல சிவந்தன் என்ற இளைஞர் முன்வந்துள்ளார். 23ம் திகதி லண்டனில் நடைபெறும் இரவு நேரப் போராட்ட முடிவில் இந்தக் கால் நடைப் பயணம் ஆரம்பிக்க இருப்பதாக அறியப்படுகிறது. சுமார் 12 நாட்கள் தொடர்பயணம் மேற்கொள்ள இருக்கும் இவர் 6ம் திகதி ஜெனீவாசென்று அங்கு ஐ.நா முன்றலில் நடைபெறவுள்ள பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பங்கேற்று, ஐ.நா பிரதிநிதிகளிடம் கோரிக்கை மனுவைக் கையளிக்க உள்ளார்.
போராளிகளின் விடுதலை குறித்து ஐ.நா துரித நடவடிக்கைகளை எடுக்கவேண்டும், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மற்றும் இன அழிப்பு தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்கக்கோரியும், இந்த நடைபயணம் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். 1983ம் வருடம் ஜூலை 23ம் நாள் சிங்கள காடையர்களால் தமிழர்கள் தாக்கப்பட்டு, சொத்துக்கள் சூறையாடப்பட்ட நாள். ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டும், காயமடைந்தும் ரத்தவெள்ளத்தில் மிதந்த நாள் கறுப்பு ஜூலை ஆகும்.
தமிழன் ரத்தம் குடிக்க புறப்பட்ட சிங்கள காடையரின் அடக்குமுறைகளை உலகிற்கு நாம் பறைசாற்றும் நாள் கறுப்பு ஜூலை. எனவே பிரித்தானியா வாழ் மக்களே அன்று இரவு 9.00 மணிக்கு நடைபெறவுள்ள போராட்டத்தில் அனைத்து தமிழ் மக்களும் கலந்துகொள்ள வேண்டும். அத்தோடு அங்கு இளையோர்களால் ஆரம்பிக்கப்பட இருக்கும் நடை பயணத்திற்கும் மக்கள் தமது ஆதரவை வழங்கவேண்டும். ஜூலையில் கொல்லப்பட்ட அனைத்து தமிழர்களின் ஆத்மசாந்திக்காக நாம் ஒன்றுகூடுவோம்!

நன்றி : அதிர்வு
Sunday, July 18, 2010
ஓயாத அலைகள் 01; வரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர்(18-07-1996)

யாழ். குடாவிலிருந்து விடுதலைப் புலிகள் தமது இயங்குதளத்தை வன்னிக்கு மாற்றிக்கொண்டபோது, புலிகள் பலமிழந்து வன்னிக்குள் முடக்கப்பட்டு விட்டார்கள் என்று சிங்கள அரசு மேற்கொண்ட பரப்புரை, 18.07.1996 அன்று அதிகாலை வேளையில் முல்லைப் படைத்தளத்தின் தடையமைப்பினுள் வெடித்த டோப்பிட்டோவின் வெடியோசையோடு முடிவுக்கு வந்தது.
ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல், இதன் பெயரிற்கேற்ப பிற்பட்ட காலத்தில் ஓயாத அலைகள் என்ற பெயரில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட வெற்றிகர வலிந்த தாக்குதல்களிற்கான முதற்படியாக அமைந்து ஓயாத அலைகள் - 01 எனக் குறித்துக் காட்டவேண்டிய தாக்குதலுமானது.
முதற்றரப் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டதும் முழுமையான கடல்வழி ஆதரவைக் கொண்டதும் தன்னகத்தே பலமான மோட்டார், ஆட்டிலறிச் சூட்டாதரவைக் கொண்டதுமான முல்லைப் படைத்தளம் விடுதலைப் புலிகளின் 30 மணிநேரத் தாக்குதலின் பின் அவர்களின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இத்தாக்குதல் விடுதலைப் புலிகளின் மற்றுமொரு வளர்ச்சியைக் காட்டும் தாக்குதலாகவும் அமைந்தது. சிங்களக் கடற்படையின் கடல்வழி ஆதரவைத் தடுக்கும் வலிமையை விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பெற்றுவிட்டார்கள் என்ற செய்தியை வெளிக்காட்டும் வகையில் முல்லைத்தளத்தினுள் கடல் வழித் தரையிறக்கம் மேற்கொள்ளப்படா வண்ணம் தடுத்த கடற்புலிகள் முல்லைத் தளத்திற்கு தெற்கே மூன்று கிலோமீற்றர் தொலைவில் அளம்பில் பகுதியில் வான்வழியால் தரையிறக்கப்பட்ட படைகள் கடல்வழியால் வலுவ+ட்டப்படுவதையும் தடுத்து நின்றனர். இவ்வாறு சிங்களக் கடற்படைக்குச் சவால்விடும் வகையில் கடலில் புலிகள் பலம் பெற்றமையையும் இத்தாக்குதலால் உலகம் கண்டுகொண்டது.
முல்லைப் படைத்தளம்:-
வன்னிப்பிரதேசத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருக்கும் கடற்கரைப் பட்டினமான முல்லைத்தீவுப் பட்டினத்தை வன்கவர்ந்து அதில் அமைக்கப்பட்டிருந்ததுதான் முல்லைப் படைத்தளம். ஆரம்பத்தில் கடல்வழிக் கடத்தலைத் தடுப்பதற்காக முல்லைப்பட்டினத்தின் ஒதுக்குப்புறமாக சிறு கூடாரமொன்றில் பத்திற்கும் குறைவான சிங்களப் படையினர் தங்கியிருந்தனர். காலப்போக்கில் அத்தங்ககம்; விரிவாக்கப்பட்டு வந்தது. 1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அத்தங்ககத்தைத் தமது முற்றுகையின்கீழ் கொண்டு வந்ததையடுத்து கடற்காற்று - ழுpநசயவழைn ளுநுயு டீசுநுநுணுநு - எனும் படை நடவடிக்கை மூலம் தமது படையினரை முற்றுகையில் இருந்து மீட்ட சிங்களப் படைகள் அங்கு பலமான படைத்தளத்தை அமைத்துக் கொண்டன. அத்துடன் 1992 ஆம் ஆண்டு சத்பல - ழுpநசயவழைn ளுயுவுர்டீயுடுயு - என்ற பெயரில்; மணலாற்றை நோக்கிய படை நகர்வை மேற்கொண்டு அளம்பில் வரையான பிரதேசத்தை வன்கவர்ந்த சிங்களப் படைகள் அதற்கு அப்பால் நகர முடியாது திணறியதுடன், முன்னகர்ந்த படைகளும் சிறிது காலத்தில் முல்லைத் தளத்திற்கே பின்னகர்ந்தன. இவ்வாறு தொடர்ந்து விரிவாக்கப்பட்டு வந்த முல்லைப் படைத்தளம் ஓயாத அலைகள் - 01 தாக்குதல் நடைபெற்றபோது ஒரு கூட்டுப்படைத்தளமாக விளங்கியது.
ஓயாத அலைகள் - 01 தாக்குதல் நடைபெற்றபோது 25 ஆவது பிரிகேட் கூட்டுப்படைத்தளமாக விளங்கிய முல்லைப் படைத்தளம் 1,407 படையினரைக் கொண்டிருந்தது. வெளிச்சுற்று, உட்சுற்று என இரு காப்புநிலை வரிசைகளைக் கொண்டிருந்த இத்தளம் 2,900 மீ. நீளமும் 1,500 மீ. அகலமும் கொண்டிருந்தது. இதன் வெளிச்சுற்றுக் காப்பு வரிசை 8,500 மீற்றர் சுற்றளவைக் கொண்டதாக இருந்தது.
முல்லைப்பட்டினத்தை மையமாகக் கொண்டு படைத்தளத்தின் உட்சுற்றுக் காப்பு வரிசை அமைக்கப்பட்டு அதனுள் ஆட்டிலறி, மோட்டார் ஏவுதளம், பிரிகேட் தலைமையகம், பட்டாலியன் தலைமையகங்கள், தொலைத்தொடர்புக் கோபுரம், உலங்கூர்தி இறங்குதளம் போன்ற தளத்தின் முதன்மை அமைப்புக்கள் காணப்பட்டன.
வெளிச்சுற்றுக் காப்பு வரிசையானது கிழக்கில் இந்து சமுத்திரத்தையும் தெற்கில் இறால் குளம் மற்றும் பரந்த வெளிகளையும் மேற்கில் நந்திக் கடல் நீரேரியையும் வடக்கில் வெட்டு வாய்க்கால் தொடுவாயையும் எல்லைகளாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. இந்தத் தரையமைப்பானது காப்பு வரிசையமைப்பிற்கு மிகவும் சாதகமானதாக விளங்கியது. இந்தக் காப்பு வரிசையிலே உயர்ந்த மண்ணணை அமைக்கப்பட்டு அதிலே அண்ணளவாக 40 மீற்றரிற்கு ஒரு காப்பரண், தேவைப்படும் இடங்களில் உயரமாக அமைக்கப்பட்ட கண்காணிப்புக் கோபுரங்கள் என இடையறாத கண்காணிப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், தளத்தின் உட்புறத்தை கண்காணிக்க முடியாதவாறு மண்ணணையின் மேல் மறைப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. இந்த மண்ணணையின் வெளிப்புறத்தே பல நிரைகளில் அமைக்கப்பட்டிருந்த தடையமைப்புகள், கண்ணி வயல்கள், இரவுக் கண்காணிப்பு ஏற்பாடாக ஒலி அவதானிப்பு நிலைகள் என உயர்காப்பு ஏற்பாடுகளை இத்தளம் கொண்டிருந்தது.
வேவு:-
இத்தளம் விடுதலைப் புலிகளின் பொதுவான வேவு நடவடிக்கைக்கு உட்பட்டு இருந்தது ஆயினும் விடுதலைப் புலிகளின் இயங்குதளம் வன்னிக்கு நகர்ந்தபின் தேசியத் தலைவர் அவர்கள் இத்தளத்தைத் தாக்குவதற்கான சிறப்பு வேவு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பணித்தமைக்கு இணங்கச் சிறப்புத் தளபதி ஒருவரின் ஒருங்கிணைப்பின்கீழ் முன்னர் பொதுவான வேவில் ஈடுபட்ட போராளிகளையும் இணைத்துக் கொண்டு முனைப்பான வேவு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. கடல் வழியாலும் தரைவழியாலும் மிகவும் விரிவான வேவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மிகுந்த இடர்களின் மத்தியில் வேவு வீரர்கள் இரவைப் பகலாக்கி முல்லைப் படைத்தளத்தின் அமைப்பை அறிந்தார்கள்.
தாக்குதல் திட்டம்:-
ஓயாத அலைகள் - 01 தாக்குதல் திட்டமானது அனைத்துச் செயற்பாடுகளும் நடைமுறையில் ஒத்திகை பார்க்கப்பட்டு மிகவும் துல்லியமாகத் தீட்டப்பட்டது. எடுத்துக்காட்டாக எதிரித்தளத்தின் வெளிச்சுற்றுக் காப்பு வரிசையின் கொலை வலயத்தினுள் அணிகள் நகர்த்தப்பட்டே நகர்விற்கான நேரங்கள் பெறப்பட்டு நேரத்திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டது.
தாக்குதல் திட்டமானது பின்வரும் படிமுறைகளைக் கொண்டிருந்தது.
- எதிரியின் வெளிச்சுற்றுக் காப்புவரிசையில் ஊடுருவல் பாதைகளை உருவாக்குதல்.
- அப்பாதையினூடாக ஊடுருவும் அணிகள் வெளிச்சுற்றுக் காப்பு வரிசையிலுள்ள காப்பரண்களைக் கைப்பற்றுதல்.
- ஊடுருவல் பாதைகள் மற்றும் கைப்பற்றப்பட்ட காப்பு வரிசையிலுள்ள சாதகமான பாதைகளால் உள்நுழையும் அணிகள் பிரதேசத் தேடியழிப்பை மேற்கொண்டு வெளிச்சுற்றுக்காப்பு வரிசைக்கும் தளத்தின் மையப் பகுதிக்கும் இடையேயான பிரதேசத்தைக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வருதல்.
- தாக்குதல் ஆரம்பித்த உடனேயே தளத்தின் மையப்பகுதி நோக்கி நகரும் அணிகள் தளத்தின் மையப்பகுதியைக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவருதல்.
- கடலூடாகவும் கடற்கரையில் அதற்குச் சமாந்தரமாகவும் ஊடுருவும் அணிகள் கடற்கரையைக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்து தளத்திற்கான கடல்வழி ஆதரவைத் துண்டித்தல்.
இதனைத் தவிரப் பின்வரும் பணிகளும் திட்டமிடப்பட்டன.
- தளத்திற்கு மணலாற்றுப் பிரதேசத்தி லிருந்து தரைவழி ஆதரவு வழங்கப்படுதலைத் தடுத்தல்.
- தளத்திலிருந்து மணலாற்றுப் பிரதேசத்தை நோக்கிப் படையினர் பின்னகர் வதைத் தடுத்தல்.
- தளத்தை அண்டிய பிரதேசங்களில் தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்டுத் தளம் வலுவ+ட்டப்படுவதைத் தடுத்தல்.
ஒட்டுமொத்தத்தில் முழுமையான வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக
Ø துல்லியமானதும் விரிவானதுமான வேவு நடவடிக்கை.
Ø விரிவானதும் நுணுக்கமானதுமான தாக்குதல் திட்டம்.
Ø துணிவுமிக்கதும் புதுமையானதுமான அரை மரபுவழி (ளுநஅi-உழnஎநவெழையெட) தாக்குதல் உத்திகள்.
Ø விரிவான பின்னணி ஏற்பாடுகள்
Ø துல்லியமான தகவல்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட விரிவான தொடர் ஒத்திகைப் பயிற்சிகள்.
Ø இரகசியக் காப்பு.
Ø ஏமாற்று நடவடிக்கைகள்.
Ø எதிரி எதிர்பார்க்காத வகையிலான மறைமுகச் சூட்டுப் படைக்கலங்களின் வினைத் திறனான பயன்பாடு.
Ø போதியளவான ஆளணி, படைக்கல ஒதுக்கீடு.
என்பவற்றுடன் ஓயாத அலைகள் - 01 தாக்குதல் திட்டமிடப்பட்டது.
தாக்குதல்:-
திட்டத்திற்கமைய தமது குறியிலக்குப் பிரதேசங்களினுள் ஊடுருவிய தாக்குதல் அணிகள் 18 ஆம் நாளன்று காலையில் தளத்தின் பெரும்பகுதியைத் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தன. குறிப்பாகக் கடற்கரை முழுமையாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டது. படையினர் 6 ஆவது விஜயபாகு படையணியின் தலைமையகம் அமைந்திருந்த பகுதிக்குள் முடக்கப்பட்டனர். இவ்வாறு முடக்கப்பட்ட படையினர் தமக்கு அண்மையிலுள்ள கடற்கரையைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான தாக்குதல்களை மேற்கொண்ட போதும் அவை அனைத்தும் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டன.
கடற்புலிகளின் பெரும் எதிர்ச்சமர்:-
இதேசமயம் சிறிலங்காக் கடற்படை தனது உச்சத்திறனைப் பயன்படுத்தி முல்லைப் படைத்தளத்தின் கடற்கரையைச் சென்றடைய மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் கடற் புலிகளால் முறியடிக்கப்பட்டன. 15 மணித்தியாலங்களாகச் சிங்களக் கடற்படையின் உச்சப் பலத்தையும் சிங்கள வான்படையின் வான்கலங்களையும் எதிர்கொண்ட வண்ணம் கடற்புலிகள் வீரத்துடன் எதிர்ச்சமர் புரிந்தனர்.
வலுவூட்டலிற்கான தரையிறக்கம்:-
முல்லைத் தளத்தின் கடற்கரையில் ஒரு கடல்வழித் தரையிறக்கம் சாத்தியமற்றுப் போகவே முல்லைத் தளத்திற்குத் தெற்கே 3 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சிலாவத்தைப் பிரதேசத்தில் 18 ஆம் நாளன்று மாலையில் ஒரு வான்வழித் தரையிறக்கத்தைச் சிங்களப் படைகள் மேற்கொண்டன. திரிவிட பகர - என்று பெயர் சூட்டி மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையில் கிபிர் மற்றும் புக்காரா குண்டுவீச்சு வானூர்திகள், ஆஐ-24 தாக்குதல் உலங்கூர்திகளின் தாக்குதல் ஆதரவுடன் முதற்கட்டமாக ஆஐ-17 உலங்கூர்திகளில் கொண்டுவரப்பட்ட கொமாண்டோக்கள் தரையிறக்கப்பட்டனர். இவ்வாறு தரையிறக்கப்பட்ட கொமாண்டோக்களைக் கொண்டு பாதுகாப்பான தரையிறக்க வலயம் ஒன்றை உருவாக்கியபின் கடல்வழித் தரையிறக்கத்தை மேற்கொள்வதே படையினர் நோக்கமாக இருந்தது. 18 ஆம் நாளன்று அவர்களின் அந்த நோக்கம் ஈடேறக் கடற்புலிகள் அனுமதிக்கவில்லை. அத்துடன் இவ்வாறான தரையிறக்கம் ஒன்றை எதிர்பார்த்திருந்த விடுதலைப் புலிகளின் படையணிகள் தரையிறங்கிய கொமாண்டோக்களை 18 ஆம் நாள் இரவே வளைத்துக்கொண்டன.
தளம் முழுமையான கட்டுப்பாட்டில் வந்தது:-
இதேசமயம் 18 ஆம் நாள் மாலையில் முல்லைத் தளத்தினுள் முடங்கிப் போயிருந்த படையினர் மீது செறிவான நேரடி வன்கலச் சூட்டாதரவுடன் நெருங்கித் தாக்கிய விடுதலைப் புலிகளால் படையினர் அனைவரும் அழிக்கப்பட்டு அன்றிரவே படைத்தளம் விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
ரணவிரு மூழ்கடிக்கப்பட்டது:-
19 ஆம் நாளன்று சிலாவத்தையில் தரையிறங்கிய படையினர் கடல்வழியால் வலுவ+ட்டப் படுவதற்குக் கடற்புலிகள் அனுமதிக்கவில்லை. அன்று மாலை 4.30 மணியளவில் தரையிறக்க முயற்சியில் ஈடுபட்டிருந்த சங்காய் 3 வகைப் பீரங்கிப் படகான ரணவிரு கடற்கரும்புலிகளின் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்டது. அன்றும் சிங்களப் படைகளிற்கு வான்வழித் தரையிறக்கமே சாத்தியமானது. அதேசமயம் தரையிறங்கிய படையினர் மீதான விடுதலைப் புலிகளின் நெருங்கித் தாக்குதல்களும் எறிகணைத் தாக்குதல்களும் ஆரம்பமாகின.
ஆஐ-24 சேதமாக்கப்பட்டது:-
20 ஆம் நாளன்றும் கடல்வழித் தரையிறக்கம் சாத்தியமற்றுப்போக சிங்களப் படைகளின் ஒரேயொரு நம்பிக்கையாக இருந்த வான்வழித் தரையிறக்கத்திற்கும் ஆபத்து ஏற்பட்டது. விடுதலைப் புலிகளின் எறிகணை வடிவில் வந்த அந்த ஆபத்து தரையிறக்க வந்த ஒரு ஆஐ-17 உலங்கூர்தியைச் சேதமாக்க அன்று வான்வழித் தரையிறக்கமும் சாத்தியமற்றுப் போனது.
புலிகளின் இறுக்கமான முற்றுகைக்குள் தரையிறக்கப்படைகள்:-
21 ஆம் நாளன்று பலத்த முயற்சியின் பின் ஒரு கடல்வழித் தரையிறக்கத்தைச் சிங்களக் கடற்படை மேற்கொண்டது. இவ்வாறு படையினர் தரையிறக்கப்பட்டு வலுவ+ட்டல் மேற்கொள்ளப்பட்டபோதும் அந்தப் படையினரால் புலிகளின் முற்றுகையை உடைத்துக்கொண்டு நகரமுடியவில்லை.
தரையிறக்க முயற்சிகள் பயனற்றுப் போயின:-
22 ஆம் நாளன்றும் தரையிறக்க முயற்சிகள் சாத்தியமாகவில்லையாயினும் சிங்களப் படைகள் தமது தரையிறக்க முயற்சிகளைத் தொடர்ந்தன. 23 ஆம் நாளன்று தரையிறக்க முயற்சியில் ஈடுபட்டிருந்த தரையிறங்கு கலமொன்று புலிகளின் எறிகணையில் சேதமடைந்தது. அத்துடன் கடற்கரும்புலிகளின் படகொன்று நெருங்கிச் சென்று மோத முன்னர் வெடித்ததால் மற்றொரு தரையிறங்கு கலம் சேதங்களுடன் தப்பித்துக் கொண்டது. இதனால் அன்றும் தரையிறக்கம் சாத்தியமாகவில்லை.
மீட்கவந்த படைகள் பெரும் அவலத்தின் மத்தியில் மீட்டெடுக்கப்பட்டன:-
25 ஆம் நாளன்று கடல்வழித் தரையிறக்கம் சாத்தியமான போதும் புலிகளின் இறுக்கமான முற்றுகையை உடைத்துத் தரையிறங்கிய படைகளால் ஒரு அங்குலமேனும் முன்னகர முடியவில்லை. அத்துடன் புலிகளின் எறிகணைத் தாக்குதலால் தரையிறங்கிய படைகள் இழப்புக்களைச் சந்தித்துக் கொண்டிருந்தன. இந்நிலையில் 26 ஆம் நாளன்று தரையிறங்கிய படைகளை மீட்டுச் செல்லவந்த தரையிறங்கு கலம் புலிகளின் எறிகணைத் தாக்குதலால் சேதங்களுடன் மயிரிழையில் தப்பித்துக் கொண்டது. இந்நிலையில் தரையிறங்கு கலம் மூலம் மிகுந்த இடர்களின் மத்தியில் தரையிறங்கிய படைகள் மீட்கப்பட்டன.
தரையிறங்கிய படைகளைக் களமுனையில் வழிநடாத்திய லெப்.கேணல். பஸ்லி லாபிர் இந்நடவடிக்கையில் கொல்லப்பட்டார். கேணல் லோரன்ஸ் பெர்னாண்டோ காயமடைந்தார். தரையிறங்கிய படையினரில் 75 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதுடன் மீட்பின்போது தப்பித்து ஓடிய படையினர் கடலில் எறிந்த 100 இற்கும் அதிகமான சுடுகலங்கள் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டன.
1,200 இற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர்:-
தரையிறக்கப்பட்ட படைகள் உட்பட 1,200 இற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். இரண்டு 122 மி.மீ ஆட்டிலறிப் பீரங்கிகள் உட்பட பெருந்தொகையான படைக்கலங்கள், அவற்றிற்கான வெடிபொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டன. இவை அனைத்திற்கும் மேலாகத் தமிழர் தம் பாரம்பரியப் பட்டினமாம் முல்லைப்பட்டினம் மீட்டெடுக்கப்பட்டது.
இந்த வெற்றிக்காக ஏழு கடற்கரும்புலிகள் உட்பட 314 மாவீரர்கள் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்து மாவீர்களானார்கள்.
மேலும் செய்திகளுக்கு...
Thursday, July 15, 2010
லெப்.சீலன்

லெப்.சீலன்
(லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி,
திருகோணமலை,
வீரப்பிறப்பு 11-12-1960
வீரச்சாவு 15-07-1983)
ஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில் முதன்மை வாய்ந்த கெரில்லா வீரன் லெப். சீலனின் அனுபவ மொழியாகும். லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி என்ற சொந்தப் பெயரைக் கொண்ட சீலன் திருமலையின் வீரமண்ணில் விளைந்த நன்முத்து. சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் நேரடியான ஒடுக்கு முறைக்குள் சிக்குண்டு கிடந்த திருகோணமலையின் நடைமுறை அனுபவங்களைக் கண்கூடாகக் கண்டவர்.
சிறீலங்காவின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் கடற்படை, விமானப்படையின் அடக்கு முறைகளும் இராணுவம், பொலீஸ் ஆகியோரின் அரவணைப்புடன் சிங்களக் காடையர்கள் தமிழ் மக்கள் மீது புரிந்த கொடுமைகள் இவற்றுக்கு முடிவுகட்ட ஆயுதப் போராட்டமே ஒரேவழி என்பது சீலனின் ஒரே நம்பிக்கையாக இருந்தது. இதுவே சீலனை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைத்தது.
தமிழீழத்தை நோக்கிய அவரது சிந்தனைகளும், செயற்பாடுகளும் திட்டவட்டமானவை. தலைவர் பிரபாகரனின் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் விடுதலைப் போராட்டத்திலேயே தமிழீழம் வெல்லப்படும் என்பதில் சீலன் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். தலைவரின் நேர்மையிலும், தூய்மையிலும், திறமையிலும் அவர் எல்லையற்ற மதிப்பு வைத்திருந்தார். இயக்கத்தில் சேர்வதற்கு முன் விட்டெறிந்து விட்டு வருவதற்கு வளமான வாழ்க்கையோ கைநிறையக் காசு கிடைக்கும் தொழிலோ சீலனுக்கு இல்லை. ஆனால் இவரை நம்பி அன்றாடம் உணவுக்கே கடினப் பட்டுக் கொண்டிருக்கும் ஒரு வறிய குடும்பம் இருந்தது. ஆனால் கல்லூரி நாட்களிலேயே இனவெறி பிடித்த சிங்கள ஆளும் வர்க்கத்திற்கெதிரான போராட்ட உணர்வு கொண்டவராக சீலன் திகழ்ந்தார்.
1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொண்டு வரப்பட்ட சிறீலங்கா சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சனாதிபதியாகப் பதவியேற்கும் வைபவத்தினை தமிழீழ மண்ணில் கொண்டாட சிங்கள ஆட்சியாளர் எண்ணினர். இந்த வைபவத்தினையொட்டி திருமலை இந்துக் கல்லூரியில் சிறீலங்காவின் தேசியக் கொடியை ஏற்றிவைக்க ஒழுங்குகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன. சீலன் தனக்கே உரித்தான நுட்பமான அறிவினைப் பயன்படுத்தி பொஸ்பரஸ் என்னும் இரசாயனத்தை அக்கொடிச் சுருளில் மறைத்து வைத்தார். தேசியக் கொடியை ஏற்றும் போது அது எரிந்து சாம்பலாகியது. சந்தேகத்தின் பேரில் 18 வயது மாணவனான சீலன் கைது செய்யப்பட்டு சிங்களக் கூலிப்படையால் சித்திரவதை செய்யப் பட்டார். அந்த வயதிலும் தனக்கு உடந்தையாக இருந்த எவரையும் அவர் காட்டிக் கொடுக்கவில்லை.
அவர் தனது ஆயுதப் போராட்ட வரலாற்றில் சாதித்தவை மகத்தானவை. 1981 அக்டோபர் மாதம் பிரிகேடியர் வீரதுங்கா சிறீலங்கா அரசாங்கத்தால் பதவி உயர்த்தப்பட்டு யாழ் இராணுவ அதிகாரியாக நியமிக்கப் பட்டபோது தமிழீழப் போராட்ட வரலாற்றில் முதற் தடவையாக சிறீலங்காக் கூலிப்படைக்கு எதிரான கெரில்லாத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கி வெற்றிகரமாக நடாத்தி இரண்டு சிங்கள இராணுவத்தைச் சுட்டு வீழ்த்தியவர் சீலன்.
1982இல் சனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜே.ஆர்.ஜெயவர்த்தனா பயணம் செய்ததையொட்டி காரைநகர் பொன்னாலைப் பாலத்தில் கடற்படையினரின் இரக் வண்டியினைச் சிதைக்கும் தாக்குதல் நடவடிக்கை சீலன் தலைமையிலேயே நடைபெற்றது. இத்தாக்குதலில் இருந்து சிறீலங்காப் படையினர் தப்பிக் கொண்ட போதிலும் இத்தாக்குதல் சிறீலங்கா அரசுக்கு அச்சமூட்டுவதாக அமைந்தது.
1982 அக்டோபர் 27ஆம் நாள் சாவகச்சேரிப் பொலீஸ் நிலையம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட வெற்றிகரமான தாக்குதலில் வலது காலில் காயமடைந்த சீலன் காலைக் கெந்திக் கெந்தி இழுத்தவாறே தனது துப்பாக்கியுடன் எதிரிகளின் துப்பாக்கியையும் நண்பர்களின் கைகளில் கொடுத்துவிட்டு மயங்கிச் சாய்ந்தார். இத் தாக்குதலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன் பயிற்சியின் போது நெஞ்சில் குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று ஓரளவு உடல்நிலை தேறியிருந்த சீலனுக்கு இது இரண்டாவது தடவையாக காயம்பட்டது. ஆனால் அவர் ஓய்வில்லை. சிங்கள இனவெறியரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஐ.தே.க வின் உறுப்பினர்களாக இருந்த மூவர் மீது 1983 ஏப்ரல் 29ஆம் நாள் இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கை சீலனின் தலைமையிலேயே இடம்பெற்றது.
1983 மே மாதம் 18ஆம் திகதி நடந்த உள்ளுராட்சித் தேர்தலை தமிழ்மக்கள் பகிஸ்கரித்த போது தேர்தல் நிலையங்களின் பாதுகாப்பிற்கு யாழ் குடாநாடு முழுவதும் ஆயுதப் படையினர் குவிக்கப் பட்டிருந்தனர். இவ்வாறு கந்தர்மடம் சைவப்பிரகாச மகாவித்தியாலயத்தில் அமைக்கப் பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்திற்கு மூன்று சைக்கிள்களில் சீலனின் தலைமையின் கீழ் சென்ற போராளிகள் அங்கு நின்ற இராணுவத்தினர் மீது துணிகரத் தாக்குதலை நடாத்தினர்.
1983 யூலை 5ஆம் திகதி வாகனம் ஒன்றில் சென்ற சீலனின் தலைமையிலான குழு காங்கேசன் துறை சீமெந்துத் தொழிற்சாலையில் நுழைந்து நான்கு பெரிய தகர்ப்புக் கருவிகளையும் தேவையான சாதனங்களையும் எடுத்துக் கொண்டது. இக்கருவிகள் பின்னர் விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பெரிதும் உதவின. ஆனால் இக்கருவிகளைப் பெற்று பத்து நாட்களின் பின்னர் சீலன் வீரச்சாவடைந்த சம்பவம் நிகழ்ந்தது.
1983 ஆம் ஆண்டு யூலை மாதம் 15ஆம் நாள் மூன்று மணிக்கு தேசத்துரோகி ஒருவனின் காட்டிக்கொடுப்பால் சீலன், ஆனந்த் உட்பட நான்கு போராளிகள் தங்கியிருந்த மீசாலைப் பகுதியை சிங்கள இராணுவம் சுற்றி வளைத்தது. ஒரு மினிபஸ், இரண்டு ஜீப் , ஒரு ட்ரக் வண்டிகளில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிவிலுடையணிந்த சிங்கள இராணுவ அதிரடிப் படையினர் சுற்றி வளைத்தனர்.
இதனை உணர்ந்து கொண்ட போராளிகள் நால்வரும் தங்கள் துப்பாக்கிகளை இயக்கியவாறு முற்றுகையை உடைத்து வெளியேற முயன்றனர். இவர்கள் வெட்ட வெளியில் நிற்க இராணுவமோ பனை வடலிக்குள் நிலை எடுத்திருந்தது. இடைவிடாது போராட்டம் தொடர்ந்தது. இந் நிலையில் சிங்கள இராணுவத்தின் துப்பாக்கிச் சன்னம் ஒன்று சீலனின் மார்பில் பாய்ந்திருந்தது. ஆனால் அவர் உயிர் போகவில்லை. உயிருடன் எதிரி கையில் அகப்படக் கூடாது என்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மரபுக்கு ஏற்ப “ என்னைச் சுட்டுவிட்டு ஆயுதங்களுடன் பின்வாங்குங்கள் ” என ஏனைய போராளிகளுக்கு சீலன் கட்டளை இடுகின்றார்.
திகைத்துப் போன அந்தப் போராளிகள் நிலைமையை உணர்ந்து கட்டளையை நிறைவேற்றுகின்றனர். அதேபோல இம் மோதலில் ஆனந்த் என்ற போராளியும் காயமடைந்து வீழ்கிறார். அவரும் “ என்னையும் சுட்டு விடுங்கள் ” எனக் கோரிக்கை விடுகிறார். இவரையும் சுடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட மற்றைய இருபோராளிகள் முற்றுகையை உடைத்துக் கொண்டு வெளியேறினர்.
லெப்.சீலன் போராட்டத்தின் போது எவ்வாறு ஒரு தனித்துவமான போராளியாக விளங்கினாரோ அவ்வாறே அவரது வீரச்சாவும் வித்தியாசமாக அமைந்தது. இவ்வாறான மாவீரர்களின் தியாகங்களின் பலத்திலேயே தமிழீழ விடுதலைப் போராட்டம் வீறுநடை போட்டுச் செல்கின்றது.
இவ்விரு வேங்கைகளின் 27 வது ஆண்டின் நினைவின் இன்றைய தினத்திலே லெப். சீலன் மற்றும் வீரவேங்கை ஆனந்த் இருவருக்கும் எமது அகவணக்கத்தை செலுத்தி அவர்கள் விட்டுச் சென்ற வழியிலே ஒன்றிணைந்த தமிழினத்தின் பலமாக எமது விடியலின் கதவினைத் திறக்க அயராது பாடுபடுவோம்..
விடுதலையடைவோம்!!
மேலும் மாவீரர் வரலாறுகள் பற்றி அறிய இங்கே சொடுக்கவும்..
Wednesday, July 14, 2010
அடேல் பாலசிங்கம் பார்வையில் திரு.பிரபாகரன்

எமது வீட்டிற்கு திரு.பிரபாகரன் அடிக்கடி வந்து செல்வார். உத்தியோக ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் அவரது விஜயம் அமையும். அவர் தனியே தனது மெய்ப் பாதுகாவலர்களுடன் வருவார். மற்றும் சமயங்களில், தனது குடும்பத்தினருடன் வருவார்.
அப்பொழுது 1998ம் ஆண்டின் மத்திய காலம்,
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று நாயகனான திரு.வேலுப்பிள்ளை பிரபாகரனை அறிந்து பழகி, சேர்ந்து வாழ்ந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்த நீண்ட காலகட்டத்தில், தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் கொண்டிருந்த உறவும், அதனால் அவருடன் சேர்ந்து பகிர்ந்த ஆழமான அனுபவங்களும் அவரைப் புரிந்து கொள்ள ஏதுவாக அமைந்தன. அதாவது, இலங்கைத் தீவின் அரசியற் தலைவிதியை நிர்ணயிக்கும் வல்லாற்றலுடைய ஒரு மாமனிதனின் மிகவும் சிக்கலான ஆளுமையை புரியக் கூடியதாக இருந்தது. இந்த இருபது ஆண்டுகால உறவு, தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் ஒரு சகாப்தம் எனச் சொல்லலாம்.
இந்த சகாப்தத்தில், அவரது அரசியல் வாழ்விலும், தனிப்பட்ட வாழ்விலும் ஏற்பட்ட இன்ப துன்பங்களிலும், சரிவு நிமிர்வுகளிலும், இடர்களை மீண்ட வெற்றிகளிலும் நாம் ஒன்றாகவே பயணித்தோம். இந்த நீண்ட பயணத்தின்போது, ஒரு இளம் தீவிரவாதியின் விடுதலை இலட்சியங்கள், முன்னேற்றப் பாதையில் படிப்படியாக மெய்வடிவம் பெற்றுவந்துள்ளதை நாம் காணக்கூடியதாக இருந்தது. தனது மக்களின் விடுதலைப்பாதையில் வெற்றிநடை போட்டுச் செல்லும் அதேவேளை, தேசிய சுதந்திரத்தின் உயிர்ச் சின்னமாகவும் திரு. பிரபாகரன் உருவகம் பெற்றார். அத்தோடு, ஒடுக்கப்படும் அவரது மக்கள் மத்தியில் போற்றிப் பூசிக்கப்படும் புனிதராகவும் அவர் வளர்ச்சி பெற்றார். தனது சொந்த பாதுகாப்பு காரணத்திற்காக திரு.பிரபாகரன் ஒதுங்கி வாழ நிர்ப்பந்திக்கப்பட்டார்.
இதனைச் சிலர் தப்பாகக் கருதி அவரைத் தனித்து வாழும் துறவியாக சித்தரிக்க முயன்றனர். தொடரும் போர்ச்சூழல் புறநிலையால் ஒதுங்கி வாழ நேர்ந்ததாலும் ஊடகவியலாளர்களை தவிர்த்து வந்ததாலும் அவரை உலகம் புரிந்து கொள்ளவில்லை. அதனால் இன்றைய நவின யுகத்தில் அவர் மிகவும் புரியப்படாத மனிதராக, அச்சத்திற்குரிய கெரில்லாத் தலைவராகவும் கருதப்பட்டு வருகின்றார். ஆயினும் அவரது அலாதியான இராணுவ வெற்றிகள் அவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தன. போர்க் கலையில் பிரபாகரன் காட்டிவரும் திறனாற்றல் உலக இராணுவ நிபுணர்களையே திகைப்பூட்டி வருகிறது.
ஒருபுறம் தனது மக்களின் ஆழமான அன்பையும், மறுபுறம் உலகத்தாரின் வசைப் பெயரையும் பெற்றுள்ள இந்த உயரம் குறைந்த, கட்டமைப்பான, தூய்மையான மனிதனுக்கு இவற்றைத் தேடிக் கொடுத்தது என்ன? சொந்த மக்கள் மத்தியில் ஒரு பார்வையும், உலகத்தார் மத்தியில் இன்னொரு பார்வையுமாக இரு முரண்பட்ட கண்ணோட்டங்கள் ஏற்பட்டதன் காரணம் என்ன? 1954ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் திகதி, யாழ் குடாநாட்டின் கரையோரக் கிராமமாகிய வல்வெட்டித்துறையில் பிறந்த திரு பிரபாகரன் தனது 16 வயதுப் பிராயத்தில் ஆயுதம் ஏந்தி, அரசியற் போராட்டத்தில் குதித்தார். இன்றைய மொழியில் சொல்லப்போனால் அவர் ஒரு ‘குழந்தைப்` போர்வீரனாகவே களத்தில் இறங்கினார்.
சிறுபிராயத்திலிருந்தே அவர் சாதாரண வாழ்க்கையை வாழவில்லை.
அவரது இலட்சியப்பற்று தீவிரமாகியதை அடுத்து, தம்மோடு ஒத்த கருத்துள்ள தீவிரவாத இளைஞர்களை அணிதிரட்டி ஒரு புரட்சிகர அமைப்பை உருவாக்கினார். இது ஒர் தலைமறைவு - கெரில்லா இயக்கமாக உருவகம் பெற்று ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தது. பிரபாகரனது துணிச்சலான ஆயுதப் போராட்ட நடவடிக்கைகள் அரச அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தன. இதன் விளைவாக அவர் ஒரு ‘தேடப்படும் நபராக` மாற்றப்பட்டு யாழ்ப்பாணத்தில் தலைமறைவு வாழ்க்கையைத் தழுவவேண்டி நேர்ந்தது. பலம்மிக்க சிங்கள அரசுக்கு பிரபாகரன் விடுத்த துணிகரமான சவால் அவரைத் தமிழ் மக்கள் மத்தியில் மரியாதைக்கு உரியவராகப் பிரபல்யப்படுத்தியது.
காலப் போக்கில், மக்களிடையே ஒரு மாவீரனாக, சரித்திர நாயகனாக அவர் போற்றப்பட்டார். மிகவும் நுட்பமாக, புத்திகூர்மையுடன் அரசுக்கு சவால் விடுத்து அவர் ஈட்டிய சாதனைகளை தமது வெற்றிகளாகவே கருதி தமிழ் மக்கள் பெருமைகொண்டனர். தமது அடையாளத்தையும், தேசிய கௌரவத்தையும் மேம்பாடு செய்யும் சாதனைகளாகவும் இதனை மக்கள் கருதினர். அரச அடக்குமுறை அதிகரித்துச் சென்றபோது பிரபாகரனின் ஆயுதப் போராட்டமும் தொடர்ச்சியான வெற்றிகளையீட்டி முன்னேறியது. இந்த வெற்றிகரமான விடுதலைப் போரின் விளைவாக திரு. பிரபாகரன் தமிழீழ மக்களின் தேசியத் தலைவன் என்ற உன்னத இடத்தை தனதாக்கிக்கொண்டார்.
தமிழீழ மக்களின் தேசிய சுதந்திரம் அவரது இலட்சிய வேட்கையாக, தணியாத ஆன்மீக தாகமாக உருப்பெற்றது. விடுதலைப் போராட்டமே அவரது வாழ்க்கையாகவும், அவரது வாழ்க்கையே விடுதலைப் போராட்டமாகவும் மாறியது. ஒரு தத்துவ ஆசிரியராகவோ, அல்லது சித்தாந்தவாதியாகவோ திரு. பிரபாகரன் என்றுமே பாசாங்கு செய்ததில்லை. அவரது அரசியல் இலட்சியத்தினை ஆழமாகப் பார்த்தால் அவரை ஒரு நாட்டுப் பற்றுடைய தேசியவாதியாகவே கருதமுடியும். சில சிங்கள அரசியல் விமர்சகர்கள் வாதிடுவதுபோல பிரபாகரனின் தேசியவாதம் தமிழ் இனவெறியைப் பிரதிபலிக்கவில்லை. தமிழ் மக்களை இனரீதியாக அழித்தொழிக்க வேண்டுமென்ற சிங்கள இனவாத ஒடுக்குமுறையை முறியடிக்க வேண்டுமென்பதில் திரு.பிரபாகரன் திடசங்கற்பம் பூண்டு நிற்கின்றார்.
இந்த திடசங்கற்பத்திலிருந்து பிறந்ததுதான் பிரபாகரனின் தமிழ்த் தேசியப் பற்று. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் சிங்கள அரசின் இனவெறிக் கொள்கைதான் பிரபாகரனை ஒரு தீவிர நாட்டுப்பற்றாளனாக மாற்றியது எனலாம். தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள ஆழமான பாசமும், அவர்களது பண்பாடு மீதும், குறிப்பாக தமிழ்மொழி மீது கொண்டுள்ள தீராத காதலும் பிரபாகரனின் விடுதலை வேட்கைக்கு ஆதாரமாக அமைகின்றன. அரசியற் சித்தாந்தங்கள், கோட்பாடுகள் பற்றி பிரபாகரன் பெரிதும் அலட்டிக் கொள்வதில்லை. அவரைப் பொறுத்தவரை தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை, சிக்கல்கள் நிறைந்த பூடகமான விடயம் அல்ல. தமிழரின் பிரச்சினையை அவர் மிகவும் தெளிவானதாகவே நோக்குகின்றார். அத்துடன் தமிழரின் போராட்டத்தையும் நியாயமானதாகவே அவர் கருதுகிறார்.
தமிழீழம் என்கிற தாயக மண்ணில்தான் பிரபாகரனின் ஆழ்மனம் ஆழவேரோடி நிற்கிறது. தமிழ் மக்கள் தமது வரலாற்று ரீதியிலான தாயக மண்ணில் சமாதானமாக, கௌரவமாக, ஒத்திசைவாக வாழ்வதற்கு உரித்தானவர்கள் என்பதில் பிரபாகரனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கையுண்டு. பிரபாகரனின் தமிழீழக் கொள்கையில் பிரிவினைவாதமோ விரிவாக்க நோக்கமோ இருக்கவில்லை. தமிழீழம் தமிழீழ மக்களுக்கே சொந்தமானது, தமிழீழ சொந்த மாநிலம் மீது தமிழீழ மக்களுக்கே இறையாட்சி உரிமையுண்டு என்பதே பிரபாகரனின் நிலைப்பாடு. சிங்கள மக்களது பாரம்பரியப் பிரதேசங்களை ஆக்கிரமிப்பதோ, அபகரிப்பதோ பிரபாகரனின் நோக்கமல்ல. அவரது சிந்தனையிலும் செயற்பாட்டிலும் இத்தகைய நோக்கத்தைக் காணமுடியாது.
சில இந்திய அரசியல் விமர்சகர்கள் சொல்வதுபோன்று தமிழீழத்தை அகன்ற ஈழமாக விரிவாக்கம் செய்யும் கனவு கூட அவர் கண்டதில்லை. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை நெறிப்படுத்துவதில் பிரபாகரன் எப்பொழுதுமே தனித்துவத்தையும், தனிவழியையும் கடைப்பிடித்து வந்திருக்கிறார். உலக விடுதலைப் போராட்டங்களின் வரலாறு பற்றியும், மற்றைய நாடுகளின் சுதந்திர இயக்கங்கள் பற்றியும் நன்கு அறிந்தபோதும் அந்நிய போராட்ட வடிவங்களை கண்மூடித்தனமாகப் பின்பற்ற பிரபாகரன் விரும்பியதில்லை. எந்த விடுதலைப் போராட்டமும் அந்தந்த வரலாற்றுச் சூழலுக்கும், யதார்த்த புறநிலைகளுக்கும் ஏதுவானதாக வளர்ச்சிநிலை காணவேண்டும் என்பதே பிரபாகரனின் நிலைப்பாடு. தனது மக்களின் போராட்ட புறநிலைகளுக்கும் தேவைகளுக்கும் இசைவாகவே அவர் தனது போர் முறைகளை நெறிப்படுத்தினார்.
அவரது சில போர்த் தந்திரோபாயங்களும் உத்திகளும் பலத்த கண்டனங்களுக்கு, குறிப்பாக சிங்கள அரசியல் இராணுவ ஆய்வாளர்களின் கண்டனங்களுக்கு ஆளாவதுண்டு. மிகவும் பலம்வாய்ந்த, சக்திமிக்க, ஈவிரக்கமற்ற எதிரியிடமிருந்து மிகவும் பலவீனமான, சிறிய தேசிய இன மக்களைப் பாதுகாப்பதற்கு ஈவிரக்கமற்ற உத்திகளை கையாள வேண்டியது அவசியம் என தனது போர் நடவடிக்கைகளுக்கு நியாயம் கூறுவார் பிரபாகரன்.பிரபாகரன் ஒரு கரும வீரர். செயலில் நம்பிக்கை உடையவர். மனித செயற்பாடுதான் வரலாற்றை இயக்கும் உந்து சக்தி என்பதில் அவருக்கு அசையாத நம்பிக்கை உண்டு. பூடகமான தத்துவார்த்த கோட்பாடுகள் மூலம் பிரச்சினைகளை அலசிப் பார்க்காமல், ஆக்கமான செயற்பாட்டில் நம்பிக்கை கொண்டிருப்பது காரணமாகவே அவர் தனது விடுதலை இயக்கத்தை முன்னேற்றப் பாதையில் முன் நடத்திச் சென்றார்.
தமிழ் அரசியல்வாதிகளின் வார்த்தை ஜாலங்களில் ஏமாந்து விரக்தியடைந்த புரட்சிகர இளைஞர் சமுதாயத்தை பிரபாகரனின் செயற்திறன்மிக்க போராட்டப் பாதை வெகுவாகக் கவர்ந்து இழுத்தது. இதன் காரணமாக, எத்தனையோ இடர்களுக்கும் மத்தியில், இளம் சமூகத்தை அணிதிரட்டி, சிங்கள அரச இயந்திரத்தை எதிர்த்துப் போராடும் வலுவுடைய ஒரு தேசிய விடுதலை இராணுவத்தை அவரால் கட்டியெழுப்ப முடிந்தது. தனது போராட்ட இலட்சியத்தை பிரபாகரன் இன்னும் அடையவில்லை என்பது உண்மைதான். ஆயினும், பிரபாகரனது மதிநுட்பமான போர் திட்டங்களும், அவற்றைத் திறம்பட நிறைவு செய்யும் அபாரமான ஆற்றலும் காரணமாகவே, இருபத்தைந்து ஆண்டு காலத்திற்கு மேலாக அவர் கட்டிவளர்த்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இன்று தலை நிமிர்ந்து நிற்கிறது.
தமிழீழ மக்களும் ஒரு தேசிய இனக் கட்டமைப்போடு நிலைத்து நிற்கின்றனர். பிரபாகரன் இல்லாது போனால் விடுதலைப் புலிகள் அமைப்பும், தமிழ்த் தேசிய இனமும் பல வருடங்களுக்கு முன்னரே அழிக்கப்பட்டிருக்கும். புலிகளுடனான எனது வாழ்பனுபவத்திலிருந்தே நான் இதைக் கூறுகின்றேன். தமிழ் மக்களும் நிச்சயமாக இக் கருத்தையே கொண்டுள்ளனர். தமிழீழ மக்களின் அரசியல் இலட்சியங்களை அடைவதற்கு ஆயுதப் போராட்டத்தின் தேவையையும் அவசியத்தையும் முதன்மைப்படுத்தி திரு பிரபாகரன் செயற்பட்டபோது, அந்த ஆயுதப் போராட்டத்தின் அரசியற் பரிமாணத்தை மேலோங்கச் செய்வதற்காக பாலா உழைத்தார்.
ஒரு முகச் சிந்தனையுடைய இவ்விரு தனிப்பட்ட மனிதர்களது உறவு மிகவும் அபூர்வமானது. வரலாற்று இயக்கத்தின் ஒரு முக்கிய கால கட்டத்தில், வெவ்வேறு ஆளுமையுடைய இரு மனிதர்கள் ஒன்றாக இணைந்து முக்கிய பங்குகளை வகித்துச் செயற்படும் அபூர்வமான உறவுகளில் இதுவும் ஒன்று. திரு பிரபாகரனதும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினதும் ஆலோசகராகவும் தத்துவாசிரியராகவும் செயற்படுவதே தனது பங்கு என பாலா எப்பொழுதுமே கருதிக்கொள்வார். பாலாவுக்கு அதிகார அபிலாசைகள் எதுவும் கிடையாது. எழுதுவது, கற்பிப்பது, ஆலோசனை வழங்குவது போன்றவற்றுடன் தனது பங்களிப்பை அவர் வரையறுத்துக் கொள்வார். அத்தோடு உறுதி தளராத இலட்சியப் பற்றுள்ளவர். இவை காரணமாகவே திரு பிரபாகரனின் மிகவும் நம்பிக்கைக்குரிய ஆலோசகராக அவரால் பணிபுரிய முடிந்தது.
உண்மை பேசும் நேர்மையான பண்பு பாலாவிடம் உண்டு. இப் பண்பியல்பு காரணமாகவே திரு. பிரபாகரன் பாலாவிடம் அன்பும் மதிப்பும் வைத்திருக்கிறார். விடுதலைப் போராட்டத்தினதும் திரு. பிரபாகரனதும் நலனைக் கருத்திற்கொண்டு, எப்பொழுதுமே எவ்விடயத்திலும் சரியான, உண்மை வழுவாத ஆலோசனை வழங்கவேண்டும் என்பதே பாலாவின் குறிக்கோள். தமது ஆலோசனைகளை பிரபாகரன் ஏற்றுக்கொள்வாரா அல்லது தாம் மனம் திறந்து நேர்மையுடன் கூறுவது அவருக்கு வெறுப்பூட்டுமோ என்பது பற்றியெல்லாம் பாலா கவலைப்படுவதில்லை. திரு பிரபாகரனின் ஆலோசகர் என்ற ரீதியில், எவ்வளவு கசப்பாக இருந்தபோதும் உண்மையை எடுத்துச் சொல்வதுதான் தனது கடமையென பாலா என்னிடம் அடிக்கடி சொல்லியிருக்கிறார்.
திரு. பிரபாகரனின் தனிமனித இயல்புகளைப் பார்க்கும்போது தான் அவரை ஆழமாக புரிந்து கொள்ள முடியும். வெளியுலகம் அவரை சித்தரிப்பதுபோல் அல்லாமல், அவர் ஒரு அன்புள்ளம் படைத்த மனிதர். மற்றவர்களுடன் எளிதில் பழகுவார். கூடிப் பழகி, உரையாடி மகிழ்கின்ற இயல்பு அவரது தனித்துவப் பண்பு. அவர் பல்வேறு விவகாரங்களில் ஆர்வமும் அக்கறையும் உள்ளவர். சில விடயங்களில் தீவிரமான நிலைப்பாடும் உடையவர். ஒரு சில விடயங்களில் எனக்கு அவருடன் கருத்து வேறுபாடு உண்டு. விஞ்ஞான அறிவியற் துறையில் அவருக்கு அலாதியான ஆர்வமுண்டு. விஞ்ஞான, தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டுமென அவர் அடிக்கடி போராளிகளை ஊக்குவிப்பதுண்டு. தமிழ்க் கலாச்சாரத்திலும் அவருக்கு ஆழமான பற்றுண்டு.
போராட்ட வாழ்வு கலாச்சார வடிவங்களில் வெளிப்பாடு காணவேண்டும் என விரும்பும் அவர், இயக்கத்திலும் சமூக மட்டத்திலும் அதனை வலியுறுத்துவார். இராணுவ பயிற்சி முகாம்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு முக்கிய இடம் கொடுப்பார். இந் நிகழ்வுகளில் போராளிகள் நேரடியாகப் பங்களிக்க வேண்டும் என்பது அவரது அவா. விடுதலை விழுமியம் சார்ந்த கலை, இலக்கியப் படைப்புகள் தமிழீழத்தில் வளர்ச்சிகாண வேண்டும் என்பதில் ஆர்வம் உடையவர். இத்தகைய படைப்பு ஆக்கங்களை அவர் ஊக்குவித்தும் வருகிறார். சுவையான உணவு வகைகளை உண்பதிலும் அவற்றைத் தயாரிப்பதிலும் அவருக்கு ஒரு தனி விருப்பு. இதனால் அவர் விசேடமான சுவைத்திறனை வளர்த்துக்கொண்டார். சுவைத்து உண்பது வாழ்க்கையின் அடிப்படை இன்பங்களில் ஒன்று என்பதும், சமைப்பது ஒரு கலை என்பதும் அவரது கருத்து.
ஒருசில மரக்கறி வகைகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட எனது சுவையின்பத்தை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனினும் அவரது இருப்பிடத்திற்கு எம்மை விருந்திற்காக அழைக்கும் பொழுதெல்லாம் மிகவும் சுவையான மரக்கறி உணவுவகைகளை எனக்கென்று விசேடமாக ஏற்பாடு செய்வார். அவரது இருப்பிடத்திலிருந்து அடிக்கடி பாலாவுக்கு சுவையான உணவு வகைகள் தயாரித்து அனுப்பி வைப்பார். அப்பொழுது எனக்கும் மரக்கறி உணவு வரும். இப்படியான அவரது கவனிப்பால் எனது சமையல் சுமை குறைவதுண்டு. போர்க்கலையில் திரு பிரபாகரன் அபாரமான ஆற்றல் படைத்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆயுதப் போராட்ட வாழ்வில் அவரை ஆழமாக ஈர்ப்பது வெறும் ஆயுதங்களோ, சீருடைகளோ, இராணுவத் தொழில் நுட்பங்களோ அல்ல. சீரான வாழ்க்கையை நெறிப்படுத்தும் சில போர்ப் பண்புகளை அவர் பெரிதும் மதிக்கிறார் என்பதே எனது கருத்து.
அவரது சமூக தத்துவார்த்தப் பார்வையிலும், இந்தப் பண்புகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இந்தப் போர்ப் பண்புகளில் முக்கியமானது ஒழுக்கம். திரு. பிரபாகரனது பார்வையில், வாழ்க்கை நெறிக்கு மையமான கோட்பாடு ஒழுக்கம்தான். ஒழுக்கம், கட்டுப்பாடு போன்ற பண்புதான் அவரது தனிப்பட்ட வாழ்விலும், சமூகப் பார்வையிலும், இராணுவ - அரசியல் ரீதியான அவரது தலைமைத்துவத்திலும் மேலாண்மை செலுத்தி நிற்கின்றது. தனது சொந்த வாழ்க்கையின் சகல பரிமாணங்களிலும் பிரபாகரன் ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்தவராக வாழ்ந்து வருகிறார். அவரது போராட்ட வாழ்வின் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை அவர் மீது ஒழுங்கீனம் பற்றியோ ஏதாவது அவதூறு பற்றியோ சிறிய சிலு சிலுப்புக்கூட ஏற்பட்டது கிடையாது. பிரபாகரன் ஒருபொழுதும் புகைத்தது கிடையாது.
மதுபானம் அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம் கொண்ட ஒருவரைப் பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அவர் பாலாவாக மட்டுமே இருப்பார். பாலாவின் வயதும் அவர் மீது வைத்துள்ள தனிப்பட்ட மரியாதையுமே இதற்கு காரணமாகும். எமது வீட்டுக்கு வரும் பொழுதெல்லாம் உடல்நலத்தைக் கெடுக்கும் இந்தத் துர்ப்பழக்கத்தை பிரபாகரன் கேலியும் கிண்டலும் செய்வார். பாலாவிடமிருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. இதனால் பிரபாகரன் முன்னிலையில் சிகரெட் பிடிப்பதை பாலாவும் நிறுத்திக்கொண்டார். மனிதர்களிடம் வீரத்தையும் துணிவையும் போற்றுதற்குரிய பண்பாக பிரபாகரன் மதித்தார்.
தனது போராளிகளிடம் மட்டுமன்றி, பொதுமக்களிடமிருந்தும் வீர உணர்வு வெளிப்பாடுகண்டால் அதனை அவர் போற்றிக் கௌரவிப்பார். வீரம் என்பது அவரது ஆளுமையில் ஆழப் பதிந்திருக்கும் ஒரு பண்பு. போராட்ட வாழ்வில் எந்தப் பெரிய சக்தியாக இருந்தாலும், எதைக் கண்டும் அஞ்சாத, கலங்காத குணாம்சம் பிரபாகரனிடம் ஊறிப்போயிருக்கிறது. எந்த ஒரு விடயத்திலும், எந்தவொரு இலட்சியத்திலும் மனதை ஆழமாகப் பதிய வைத்து, அக்கறையுடன் செயற்பட்டால் எதையும் சாதிக்க முடியும் என்பதில் பிரபாகரனிடம் அசைக்கமுடியாத உறுதி இருக்கிறது.
துணிந்தவனுக்கு வெற்றி நிச்சயம் என்பது பிரபாகரன் அடிக்கடி கூறும் தாரக மந்திரம்.‘நீங்கள் பிரபாகரனிடம் கண்டுவியந்த குணாம்சங்களில் முக்கியமானது எது` என்று நான் பாலாவிடம் கேட்டேன்.
‘இன்னல்களும் இடர்களும் எழுந்த நெருக்கடியான காலகட்டங்களில் தளராத தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவதுதான் பிரபாகரனின் ஆளுமையில் நான் கண்டு வியந்த அபூர்வமான குணாம்சம்` என்று பாலா சொன்னார். தனது விடுதலை இலட்சியத்திற்காக அவர் செயற்படும் போது அவரிடம் காணப்படும் உறுதியான, தீர்க்கமான, தளராத தன்நம்பிக்கையை பல தடவைகள் பாலா அவதானித்திருக்கிறார்.
தர்மத்தில் நம்பிக்கை கொண்டவர் திரு பிரபாகரன். தனது மக்களின் போராட்ட இலட்சியம் சரியானது. நீதியானது, நியாயமானது, எனவே போராட்டத்தில் இறுதி வெற்றி நிச்சயம் என்பது பிரபாகரனின் அடிமனதில் ஆழவேரூன்றிய நம்பிக்கை என்பது பாலா தரும் விளக்கம். ஒரு அரசியல் தலைவனாகவும், எல்லோருடனும் அன்பாகவும் பண்பாகவும் பழகிவரும் பிரபாகரன் ஒரு தலைசிறந்த குடும்பத் தலைவருமாவார்.
தனது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், இருபத்திநான்கு மணிநேரமும் கடமையில் ஈடுபட்டிருந்தபோதும், போராட்டத்தின் பெரும் பொறுப்புகளுக்கும், கணவன், தந்தை என்ற நிலையில் தனது குடும்பக்கட்டுப்பாடுகளுக்கும் மத்தியில் ஒரு ஒத்திசைவான சமநிலையைப் பேணி அவர் செயற்பட்டு வருகின்றார். இந்த அபூர்வமான உறவில், பிரபாகரனின் மனைவியான மதிவதனி அதியுயர்ந்த தியாகத்தைச் செய்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். தாம்பத்திய வாழ்வில் கணவருடன் எந்த அளவிற்கு ஒன்றித்து வாழ அவர் விரும்பினாரோ அந்த அளவுக்கு வாழ்க்கையை நடந்த நேரமும் வாய்ப்புகளும் அவருக்குக் கிட்டுவதில்லை.
பிள்ளைகளைப் பேணிப் பராமரிக்கும் பொறுப்பில் அவர் எப்பொழுதுமே கண்ணும் கருத்துமாக இருப்பதால் அவரது செல்வாக்குத்தான் பிள்ளைகள் மீதுபடிமானமாக இருக்கிறது. பிரபாகரனது குடும்பத்தின் வாழ்க்கையை சாதாரண வாழ்க்கையாக கருதி விட முடியாது.
பிரபாகரனது மனைவி, பிள்ளைகள் என்பதால் அவர்களுக்கு தனித்துவமான சமூக அந்தஸ்து இருக்கிறது. இந்த சமூக தகைமையிலிருந்துதான் அவர்களது வாழ்க்கை முறையையும் உறவு முறையையும் ஆய்வுசெய்யவேண்டும். பெற்றோர் என்ற முறையில் பிள்ளைகளின் பாதுகாப்பு, அவர்களது எதிர்கால வாழ்க்கை பற்றிய கவலை பிரபாகரனுக்கும், அவரது துணைவியாருக்கும் இருக்கத்தான் செய்கிறது. யாழ்ப்பாணபெற்றோரின் அபிலாசைகளுக்கு ஏதுவான முறையில், பிரபாகரனும், மதியும் தமது பிள்ளைகளை கல்வி கற்கையில் ஊக்கப்படுத்திவருகின்றனர். கல்வியறிவை பிள்ளைகளிடம் விருத்தி செய்யவேண்டும் என்பதில் மதிக்கு ஆழமான அவா இருப்பதால், தனது பிள்ளைகளுக்கு, வீட்டில், தனியாக பலமணிநேரமாக அவர் பாடம் சொல்லிக்கொடுப்பார். பிரபாகரன் குடும்பப்பற்றுள்ளவர். அற வாழ்வும், அவரது வாழ்க்கையின் அடிநாதமாக இருக்கிறது.
பிரபாகரனுக்கு ‘ஓய்வு` கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தனது துணைவியாரையும் மூன்று பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு எங்கள் வீட்டுக்கு வருவார்.
1985ம் ஆண்டு பிறந்த அவரது மூத்த மகனின் பெயர் சார்ள்ஸ். சார்ள்ஸைவிட ஒரு வயது இளமையான மகள் துவாரகா.
1996ம் ஆண்டு எதிர்பாராத அதிசயமாக குடும்பத்திற்கு வந்து சேர்ந்த குழந்தை பாலச்சந்திரன்.
முதற் குழந்தையின் பிரசவத்தில் மதிக்கு நான் உதவி செய்தபோது, உரிச்சுப் படைச்சு தோற்றத்தில் மட்டு மன்றி குணாம்சத்திலும் தகப்பனைப் போலவே குழந்தை வளர்ந்து வருமென நான் நினைக்கவில்லை. ஒரே பெண் குழந்தையான துவாரகா படிப்பில் ஆழமான அக்கறையும் பொறுப்புணர்வும் உடையவர்.
பிரபாகரனின் கடைக்குட்டி பாலச்சந்திரன் குடும்பத்தில் எல்லோருக்கும் செல்லக் குட்டி. அச்சு வார்த்ததுபோல பிரபாகரனின் மறுதோற்றம்.
நான் வன்னியை விட்டு புறப்பட்ட வேளையில் குழந்தை பாலச்சந்திரன் குறிப்பிட்ட வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. அதனால் அவரது ஆளுமைபற்றி அதிகம் என்னால் சொல்லமுடியாது
-அடேல் பாலசிங்கம்-
மேலும் செய்திகளுக்கு...
சூடான் போன்று இலங்கை இனப்படுகொலை குறித்து விசாரணை நடக்குமா? - ஆய்வாளர்கள் கேள்வி

சர்வதேச நியமங்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்களுக்கு எதிராக நீதி வழங்காமல் ஒரு நாட்டில் அமைதியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த முடியாது என அமெரிக்க தேசியப் பாதுகாப்புச் சபையின் ஆலோசகர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். பொஸ்னியாவின் Srebrenica இனப்படுகொலையில் 15வது வருட நினைவை முன்னிட்டு அவர் பொஸ்னிய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.
அதேவேளை, சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பசீருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலையை மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்;டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமது விடுதலைக்காக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கொலை செய்தமை, அதன் மூலம் அப்பகுதி மக்களை உளவியல் ரீதியாக அச்சத்தில் ஆழ்த்தியமை மற்றும் உரிமைகளுக்காக போராடியோர் மீது இராணுவ அடக்குமுறைகளைக் பிரயோகித்தமை போன்ற மூன்று குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டு இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆபிரிக்கா கண்டத்தைச் சேர்ந்த நாடான சூடானின் டார்பூர் பிரதேசத்தில் பழங்குடியின மலைவாழ் மக்களின் மீதே அந் நாட்டரசு இந்த இனப்படுகொலையை மேற்கொண்டிருந்தது.
பொது மக்கள் படுகொலை, பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள், வீடுகளுக்குத் தீ வைத்தல், உணவுப் பொருட்களை கொள்ளையிடுவதன் மூலம் அம் மக்களை பட்டினியால் சாகடித்தல் போன்ற குற்றச் செயல்களில் சூடான் அரசுக்கு ஆதரவான படையினர் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந் நிலையிலேயே, சூடான் அரசாங்கமும், படைத்தரப்பினரும் குறித்த பயங்கரவாதப் படையினருக்கு ஆதரவளித்து வருவதாக குற்றச்சாட்டப்பட்டு ஜனாதிபதி ஒமர் அல் பசீர் மீது நெதர்லாந்திலுள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனையடுத்து, இந்த இனப்படுகொலை வழக்குக் குறித்த விசாரணைகளை மேற்கொண்ட சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் மனிதாபிமானத்துக்கு எதிராக இனப்படுகொலைகளை மேற்கொண்டார் என்று குற்றம்வாட்டி சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பசீரை கைது செய்ய கடந்த வருடம் உத்தரவு பிறப்பித்தனர். இதனை எதிர்த்து ஜனாதிபதி ஒமர் அல் பசீரின் சார்பில் ஆஜரான அவரது சட்டத்தரணி நான்கு மாதங்களுக்கான முன்பிணை மனுத்தாக்கல் செய்திருந்தார். இந் நிலையில், இவ் வழக்கினை கடந்த 12ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் குறித்த மனுவினை நிராகரித்ததுடன், ஜனாதிபதி ஒமர் அல் பசீரைக்; கைது செய்யவும் உத்தரவு பிறப்பித்தனர்.
இந் நிலையில், இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்படுமா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இப் போரில் சிறிலங்கா படைத்தரப்பினர் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள் சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன.
இப் போரில் சிறிலங்கா படைத்தரப்பினர் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சி, மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் ஆகியன ஆதாரங்களையும் வெளியிட்டிருந்தன. அத்துடன், இப் போரின் இறுதி நாட்களில் சர்வதேச அனுசரணையுடன் வெள்ளைக் கொடியுடன் சரணடையச் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களான நடேசன் மற்றும் பலித்தேவன் போன்றோர் சிறிலங்கா படைத்தரப்பின் உயரதிகாரியின் கட்டளையின் பேரில் சுட்டுக் கொன்றதாக களத்திலிருந்த படையதிகாரி ஒருவர் சனல் 4 தொலைக்காட்சிக்கு தெரிவித்திருந்தார்.
இந் நிலையில், இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்து சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்வதே இலங்கையில் நிரந்திர அமைதி ஏற்பட வழிவகுக்கும் என்பதை அமெரிக்க தேசியப் பாதுகாப்புச் சபையின் ஆலோசகர் சமந்தா பவர் தெரிவித்த கருத்து வலியுறுத்தி இருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு...
Monday, July 12, 2010
பயணம் ஒன்று .. பார்வை பல ...

அண்மையில் புலம்பெயர் நாடுகளிலிருந்து சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொண்ட ஒன்பதுபேர் பற்றிய செய்திகளே கடந்த வாரம் தமிழ் வட்டாரங்களில் அதிகம் பேசப்பட்ட விடயமாக இருந்தது.
இச்செய்திகளில் பெரும்பாலானவை கொஞ்சம் உண்மை, கொஞ்சம் வசவு, கொஞ்சம் புனைவு என்பதாக அவரவர் தளத்தில் நின்று வெளியிடப்பட்ட கருத்துகளாகவே அமைந்திருந்தன.
வழமையாக முந்திக் கொண்டு செய்திவெளியிடும் இணையதளங்களில் சில, இச்செய்தியை சுயதணிக்கை செய்து தமது “ஊடக நேர்மையை” வெளிப்படுத்தின.
இந்நிலையில் இப்பயணத்தில் இணைந்து கொண்ட சிலரை தொடர்பு கொண்ட நாம் அவர்கள் தெரிவித்த தகவல்கள், இச்செய்தியின் பின்னணியாக அமைந்த சம்பவங்கள் தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இச்செய்திக்கட்டுரையை வரைந்துள்ளோம்.
இருப்பினும் நாம் பெற்றுக்கொண்ட தகவல்கள், குறிப்பாக இலங்கைத்தீவில் இடம்பெற்ற சந்திப்புகள் பற்றிய, உண்மைத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளும் வாய்ப்புகள் எமக்கு இருக்கவில்லை என்பதனை கவனத்திற் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம்.
புலம்பெயர் நாடுகளில் இயங்கும் சிறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களை தம்மால் ஒழுங்கு செய்யப்பட்ட பயணங்களில் பங்கெடுக்கவைப்பதும்;, அவர்களை புலம்பெயர் மக்களின் பிரதிநிதிகளாகவும், புத்திசீவிகளாகவும் தரமுயர்த்தி தமக்குச் சாதகமான முறையில் பரப்புரைகளை மேற்கொள்வதும், சிறிலங்காவின் நன்கறிந்த தந்திரோபாயமாக இருந்து வருகிறது. இந்த வலையில் விருப்பத்துடன் விழுந்து கொள்பவர்களும் இருக்கிறார்கள், முட்டாள்த்தனமாக விழுபவர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் இங்குள்ள யதார்த்தம்.
இந்தவகையில், புலம்பெயர் தமிழர் அமைப்பு ஒன்றின் பிரதிநிதிகள் சிலருக்கும் சிறிலங்கா தூதரக அதிகாரிளுக்குமிடையிலான ஒரு சந்திப்பு கடந்தவருடம் செப்ரெம்பர் மாதத்தில் நடைபெற்றதாக எமக்குத் தெரியவந்தது. இச்ந்திப்பில் தமிழர் நலவாழ்வு அமைப்பினைச் (ரீ.எச்.ஒ) சேர்ந்த மருத்துவர் ஆறுமுகம் புவிநாதன், ஏ.விமலதாசன், சார்ல்ஸ் அந்தனிதாஸ் ஆகியோருடன் முன்னாள் த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தனும், லண்டனிலுள்ள சிறிலங்கா தூதரக அதிகாரி அம்சாவும் கலந்து கொண்டனர். இதே காலப்பகுதியில் சிறிலங்கா தூதரகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட முன்னாள் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ரொபர்ட எவன்ஸ் மற்றும், ஹரோ உள்ளுராட்சிச்சபை உறுப்பினர் தயா இடைக்காடர் ஆகியோர் கொண்ட தொழிற்கட்சிக்குழு ஒன்றும் தனியாக சந்திப்புகளை நடாத்தினார்கள்.
இச்சந்திப்பு தொடர்பாக நாம் ரீ.எச்.ஓ குழுவினரிடம் வினவியபோது, தாம் பிரித்தானியாவின் சர்வதேச அபிவிருத்தித்துறை அமைச்சராக இருந்த, கரத் தோமஸ் அவர்களின் ஆலோசனைப்படியே சிறிலங்கா தூதரக அதிகாரியை சந்தித்ததாகத் தெரிவித்தனர். பிரித்தானிய தமிழர்பேரவையின் முக்கியஸ்தர்களான தொழிற்கட்சி ஆதரவாளர்கள் சிலரும் இச்சந்திப்பிற்கு தமது ஆதரவு வழங்கியிருந்தனர். இவற்றிலிருந்து தொழிற்கட்சி தரப்பில் “இனங்களுக்கிடையிலான நல்லிணகத்தை” ஏற்றபடுத்துதல் என்ற நோக்கத்துடன் இச்சந்திப்புகள் ஊக்குவிக்கப்பட்டமையை உணரக்கூடியதாகவிருந்தது.
முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிப்பதற்கும் அவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காகவும் தாம் சிறிலங்கா அரசுடன் இணைந்து செயற்படவிருப்பதாகவும் அதற்கென Relief and Rehabilitation Network (RRN) என்ற அமைப்பினை உருவாக்கி செயற்படவிருப்பதாகவும் ரி.எச்.ஒ. இன் இணைப்பாளர் புவிநாதன் எமக்குத் தெரிவித்திருந்தார். தமது தமிழர் நலவாழ்வு நிறுவனத்துடன் Standing Committee of Tamils, ஆரோபணம் சிறுவர் அறக்கட்டளை ஆகியவையும் இணைந்து இவ்வமைப்பில் செயற்படவிருப்பதாகவும் அறிவித்தார். இது தொடர்பாக விளக்கமளிப்பதற்காக ஹரோ உள்ளுராட்சிச்சபை மண்டபத்தில் கடந்தவருடம் நொவெம்பர் மாதம் கூட்டமொன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ் மக்கள் மத்தியில் இயங்கும் மற்றய சமூக அமைப்புகளையும் தம்முடன் இணைத்து செயற்படவிருப்பதாகவும், ரொபர்ட் எவன்ஸ் இந்த அமைப்பின் தலைவராகச் செயற்படவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது
மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஆர். ஆர். என்இ மற்றும் ரி.எச்.ஓ ஆகியவற்றுக்கும் சிறிலங்கா தூதரகத்திற்கும் இடையிலான தொடர்புகள் காரணமாக, மற்றய அமைப்புகள் இவர்களுடன் சேர்ந்தியங்க மறுத்தவிட்டார்கள். புவிநாதன் அங்கம் வகிக்கும் ஊர்ச்சங்கமான தென்மராட்சி அபிவிருத்திச்சபை (பிரித்தானியா) கூட இவர்களுடன் சேர்ந்தியங்க இணங்கவில்லை. இருப்பினும் சிறிலங்கா தூதரகத்துடனான தொடர்பினை இவர்கள் நிறுத்திக் கொள்ளவில்லை.
இதன் நீட்சியாக ரி.எச்.ஓ வின் பிரதிநிதிகளாக வேலாயுதபிள்ளை அருட்குமார், ஏ.விமலதாசன், சார்ல்ஸ் அன்ரனிதாஸ் ஆகியோர் (ஜுன் 15-20) கொழும்புக்கு சென்றனர். இவர்களில் மருத்துவர் அருட்குமார் நலவாழ்வு நிறுவனத்தின் உறுப்பினர் அல்ல, இதில் வேடிக்கை என்னவெனில் சுகாதாரத்துறை சாராத மற்றய இருவரும் அதன் நிரந்தர அங்கத்தவர்கள். விமலதாசன், அதன் தலைவர். சார்ல்ஸ் அன்ரனிதாஸ், இந்தியசார்பு ரெலோ இயக்கத்தின் பிரித்தானியப் பிரதிநிதியாக இருந்தவர். பல்வேறு புலனாய்வு அமைப்புக்களுடன் நெருக்கமான தொடர்பினை பேணிவருபவர் எனப் பரவலாக பேசப்பட்டுவருகிறது.
இவர்களுடன் சிவனடியான் சிறிபதி (தீபம், பிரித்தானியா), பேரின்பநாயகம் அல்லது பெரின் இன்பம் (முன்னாள் நிதித்துறைச் செயற்பாட்டாளர் கனடா), சிவசக்தி(கனடா), கங்காதரன் (பத்மநாதனின் உறவினர், பிரான்ஸ்), உரூபமூர்த்தி(அவுஸ்திரேலியா), சந்திரா மோகன்ராஜ் (சுவிற்சலாந்து) ஆகியோரும் இணைந்து கொண்டனர்.
இவர்கள் அனைவரும் சிறிலங்காப் புலனாய்வாளர்களின் பாதுகாவலில் இருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனின் அழைப்பின்பேரில் சென்றிருந்தபோதிலும், ஒரு குழுவாக இணைந்து செய்யபடவில்லை எனத் தெரியவருகிறது.
ரி.எச்.ஓ. வின் பணிப்பாளர் புவிநாதனை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட பத்மநாதன், சிறிலங்காப்படைகளால் வெளித்தொடர்புகள் எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப்புலிகளை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடாத்த வருமாறு கேட்டுக் கொண்டதாகவும், அதனைத் தாம் சிறிலங்கா தூதரக அதிகாரியுடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தியபின் அங்கு சென்றதாக ரி.எச்.ஒ. பிரதிநிதிகள் எம்மிடம் தெரிவித்தனர்.
அண்மைக்காலமாக பத்மநாதன் புலம்பெயர் நாடுகளிலுள்ள தனது சகாக்களுடன் தொலைபேசி மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி வருகிறார் என்ற செய்திகள் வெளிவந்தமையும் அதனை அவரது சகாக்கள் மறைத்து வந்தமையையும் இங்கு சுட்டிக்காட்டுதல் பொருத்தமானதாகவிருக்கும்.
இப்பயணத்தின்போது அந்நாட்டின் பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோத்தாபாய இராஜபக்ச, இராணுவ புலனாய்வுத்துறை பொறுப்பாளர் கப்பில ஹெந்தவிதாராண, இராணுவத்தளபதி சவேந்தர் சில்வா. வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் ஆகியோரைச் சந்தித்து “புனர்வாழ்வு” விடயங்கள் தொடர்பாக உரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டது. அனைத்துச் சந்திப்புகளின் போதும் குமரன் பத்மநாதனும் உடனிருந்தததாக சார்ல்ஸ் எம்மிடம் தெரிவித்தார். சேலையணிந்த (அழகிய) இராணுவ புலனாய்வுத்துறையைச் சேர்ந்த சிங்களப் பெண்கள் சிலரும் தங்களைச் சந்தித்து உரையாடியதாகவும் குறிப்பிட்டார்.
சார்ல்ஸ், மேற்படி சந்திப்புகனையிட்டு திருப்தியடைந்துள்ளதாகத் தெரிகிறது. தமது சந்திப்பு தொடர்பாக பிபிசி இன் சந்தேசிய சிங்கள சேவைக்க வழங்கிய பேட்டியிலும் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சிறிலங்கா படையதிகாரிகளிடம் பத்மநாதன் பற்றிய மிகவும் உயர்வான எண்ணம் உள்ளதாகவும், அவரது மனங்கோணாமல் அவர்கள் பார்த்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பத்மநாதன் சிறிலங்கா அரசின் தாளத்திற்கு ஆடுவதை, அவர் வேறுவிதமாக இவ்விதம் குறிப்பிட்டிருக்ககூடும், ஏனெனில் தமிழ்நெற் இணையதளத்திற்கு மருத்துவர் அருட்குமார் வழங்கிய செவ்வியில், பத்மநாதன் சிறிலங்கா அரசிற்கேற்ப செயற்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
வன்னியில் போராளிகளைத் தடுத்து வைத்திருக்கும் முகாம் ஒன்றுக்கு தங்களை அழைத்துச் சென்றதாகவும், அப்போது தங்களுடன் பத்மநாதனும் உடனிருந்ததாகவும் ரீ.எச்.ஓ பிரதிநிதிகள் தெரிவித்தனர். மேற்படி முகாமில் போரின் இறுதிக்காலகட்டத்தில் இணைந்த இளநிலைப்போராளிகளே தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், மூத்த போராளிகள் எவரையும் சந்திக்க தங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் செட்டிக்குளம் வலயம் நான்கிற்கு கூட தங்களை அழைத்துச் செல்லவில்லை என அருட்குமார் தெரிவித்திருந்தார். இதனை மறுதலித்த சார்ல்ஸ் அங்கு ஜெயந்தன் படையணியைச் சேர்ந்த போராளிகள் சிலருடன் தான் உரையாடியதாகக் கூறினார். இருப்பினும், பத்மநாதனுக்கோ தம்முடன் வந்த மற்றவர்களுக்கோ அவர்களை தெரிந்திருக்கவில்லை எனவும் குறிப்பிட்டார். இந்நிலையில் அவர்கள் எந்தப்படையணியை சேர்ந்தவர்கள் என்பதனை அவர் எப்படி உறுதிப்படுத்திக் கொண்டார் என்பதை அவரால் விளக்க முடியவில்லை.
குறுகிய நலன் அடிப்படையில், சிறிலங்கா அரசாங்கத்துடனும் அதன் ஆயுதப்படைகளுடனும் நட்புரீதியான சந்திப்புகள் நடாத்துவது அவர்களுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளை பாதிக்காதா என நாம் புவிநாதனிடம் வினவியவோது, தாங்கள் தனித்து புனர்வாழ்வு விடயங்களில் மட்டுமே அக்கறைப்படுவதாகவும், மனிதவுரிமை விடயங்களை பிரித்தானியத் தமிழர் பேரவை போன்ற மற்றய அமைப்புகள் பார்த்துக்கொள்ளும் எனப் பதிலளிளத்தார்.
அதுபோல் போர்க்குற்றவாளியாகக் கருதப்படும் கோத்தாபாய இராஜபக்சவுடனும், புலனாய்வு அதிகாரிகளுடனும் சந்திப்புகளை நடாத்தியதைப்பற்றி கருத்துக்கூறுகையில், கோத்தாபாய போர்க்குற்றவாளி என்ற விடயத்தை தானும் ஏற்றுக் கொள்வதாகவும், ஆனால் அங்கு செயற்படும் அரசுசாரா நிறுவனங்கள் (NGOs) அவரது கட்டுபாட்டின் கீழ் வருவதால், அவரைச்சந்திப்பதைத் தவிர வேறுவழியில்லை எனத் தெரிவித்தார்.
மேற்படி சந்திப்புகள் தொடர்பாக மருத்துவர் அருட்குமார் தமிழ் நெற் இணயைதளத்திற்கு தெரிவித்திருக்கும் கருத்துகள் அங்குள்ள உண்மை நிலையை வெளிக்காட்டியிருக்கிறது. ஆனால் ஒரு பயணத்தை மேற்கொண்டபின்னர்தான் இவ்வாறான முடிவுக்கு வரவேண்டியுள்ளதா? சிறிலங்கா அரசின் உண்மை முகத்தை இத்தனை அழிவுகளுக்கு பின்னரும் புரிந்து கொள்ள முடியாத நிலையில்தான் நாம் உள்ளோமா? கற்றறிந்தவர்களின் நிலை இதுவென்றால் மற்றவர்கள் என்ன செய்வார்கள்? என்பவை அரசியல் விடயங்களில் அனுபவமுள்ளவர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் கேட்கின்ற கேள்விகளாக இருக்கின்றன.
நன்றி: ஒரு பேப்பர்
மேலும் ஈழச் செய்திகளுக்கு...
Sunday, July 11, 2010
விடுதலைக்காக ஓயாது உழைத்து உரமூட்டியவர்களை ஒரே கணத்தில் துரோகிகளாக்குவதற்கு முயலவேண்டாம்; ஒரு வேண்டுகோள்

முள்ளிவாய்க்கால் இறுதிச் சமர்க்களத்தில் ஆயிரக்கணக்கான போராளிகள் சிங்களப் படைகளிடம் சிறைப்பட்டனர்.
அவர்களில் சிலர் போரின்போது எதிர்பாராமல் பிடிபட்டனர்.
வேறு சிலர் சரணடைந்தனர்.
எதற்காக ஆயிரக்கணக்கான போராளிகள் சரணடைந்தனர்-அவர்கள் ஏன் சண்டையிட்டுச் சாகவில்லை- குப்பி கடித்து மாளவில்லை? என்று கேள்வி எழுப்புகின்றனர் சிலர்.
இறுதிநேரத்தில் போராளிகளைச் சரணடையுமாறு கட்டளையிட்டது தேசியத் தலைமையே.
தேசியத் தலைமையும் மூத்த தளபதிகளும் முன்நின்று சரணடையுமாறு போராளிகளை அனுப்பி வைத்ததற்கு- சரணடைந்த ஆயிரக்கணக்கான போராளிகளே சாட்சி.
ஆயிரக்கணக்கான போராளிகளின் உயிர்களைக் கொடுத்தாலும் போர்க்களத்தில் திருப்பத்தை நிகழ்த்த முடியாது என்ற யதார்த்தம் முள்ளிவாய்க்கால் மண்ணில் உணரப்பட்டிருந்தது.
சண்டையிட்டு மாய்வதாலோ- குப்பி கடித்து சாவதாலோ ஆகப் போவது ஒன்றுமில்லை. எல்லாமே கையை மீறிச் சென்று விட்ட நிலை அது.
போராளிகள் சரணடைந்து உயிர்களையாவது காப்பாற்றிக் கொள்ளட்டும் என்று நோக்கத்தில் தேசியத் தலைமை எடுத்த முடிவு அது.
ஆயிரக்கணக்கான போராளிகளின் மரணங்கள் நிகழ்ந்தால்- அது அவர்களின் குடும்பங்களையும் நடுத்தெருவுக்குக் கொண்டு வரும் என்பதைத் தேசியத் தலைமை உணர்ந்திருந்தது.
எனவே போராளிகளை சரணடையுமாறு அறிவுறுத்தியது தேசியத் தலைமை.
அந்த முடிவுக்கேற்ப சரணடைந்தவர்களே அதிகம்.
சரணடைந்த போராளிகள் இன்று அடையாளம் தெரியாத முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலர் எங்கே- என்னவாயினர் என்று கூடத் தெரியாது.
சிங்களப் படைகள் காவலில் உள்ள போராளிகளைச் சித்திரவதை செய்து- ஆயுதங்களை தோண்டியெடுப்பது தொடக்கம் இரகசியங்களை கறப்பது வரை எல்லாவற்றையும் செய்கின்றனர் என்பது வெளிப்படை.
தடுப்புக்காவலில் உள்ள போராளிகள்- தமது விடுதலையைத் துரிதப்படுத்தும் என்ற நம்பிக்கையிலும், சித்திரவதைகளைத் தாங்க முடியாமலும் இரகசியங்களை உளறுவது ஒன்றும் ஆச்சரியமில்லை.
இப்படியான இரகசியங்கள் சிங்களப் படைகளுக்கு கசிந்து விடக் கூடாது என்பதற்காகவே புலிகள் இயக்கம் தொடங்கப்பட்ட போது கழுத்தில் சயனைட் கட்டும் மரபை உருவாக்கினார் தேசியத் தலைவர்.
முள்ளிவாய்க்கால் மண்ணில் அந்த மரபுக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆயிரக்கணக்கில் குப்பி கடித்துச் சாவதால் எதுவும் நடக்கப் போவதில்லை என்பதை உணர்ந்தே அந்த முடிவை எடுத்தார்.
அதேவேளை தடுப்புக்காவலில் உள்ளவர்களைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகள் என்பது போன்ற பிரசாரங்களும் முன்னெக்கப்படுகின்றன.
இந்தப் பிரசாரங்களுக்குத் துணை நிற்பது புலம்பெயர் சமூகத்தில் உள்ளவர்களும் ஊடகங்களுமே.
இவர்கள் ஆயுதம் தூக்கியவர்களோ, களத்தின் யதார்த்தத்தை அறிந்தவர்களோ அல்ல.
அவர்களின் தேவைகள் வேறு விதமானவை.
இந்தியப் படைகள் காலத்தில் நூற்றுக்கணக்கான போராளிகள் சிறைப்பட்டனர்.
ஆனால் அவர்களை புலிகளின் தலைமை ஒதுக்கி வைக்கவில்லை.
மீளவும் சேர்த்து உயர் பொறுப்புகளிலும் அமர்த்தியது.
புலிகள் இயக்கத்துக்கு ஆயுதப் போராட்டம் நடத்தக் கூடியபலம் இல்லை என்றுணர்ந்த நிலையில் ஆயுதங்களைக் காட்டிக் கொடுக்கும் போராளிகளை துரோகி என்று பட்டம் சூட்டுவதற்கு யாருக்குமே தகுதியில்லை.
ஐந்து- பத்து- இருபது- முப்பது வருடங்கள் விடுதலைக்காக ஓயாது உழைத்து உரமூட்டியவர்களை ஒரே கணத்தில் துரோகிகளாக்குவதற்கு- ஒரு மணிநேரம் கூட காவலரணில் நிற்காமல் வெளிநாடுகளில் சுகபோகமாக வாழும் இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது.
ஆயுதமே தூக்காதவர்கள், ஆயுதப் போராட்டத்தைக் காட்டி புலம்பெயர் மக்களின்; பணத்தில் சுகபோக வாழ்க்கை நடத்துவோருக்கு இப்படியான குற்றச்சாட்டைச் சுமத்தும் தகுதி கிடையாது.
ஒரு காலத்தில் போராளிகள் என்று பெரிதும் மதிக்கப்பட்டவர்களை- தளபதிகளாக பொறுப்பாளர்களாக இருந்தவர்களை இன்று இவர்கள் துரோகிகள் என்று துச்சமாகப் பிரசாரம் செய்கிறார்கள்.
முள்ளிவாய்க்கால் தந்த பாடத்தை நாம் சரியாகப் படிக்கவில்லை.
நன்றி மறந்த சமூகமாக மாறிவிட்ட தமிழருக்கு முள்ளிவாய்க்கால் அழிவுகளின் முடிவாக அமைய முடியாது.
மேலும் செய்திகளுக்கு...
Saturday, July 10, 2010
ஈழப் போராட்ட வரலாறு - 5: அதிகாரத்தை முழுக்கட்டுப்பாட்டில் கொண்டுவரத் திணறிய வலதுசாரிகள்

இலங்கை வலதுசாரிகள் பலமான ஆளும்வர்க்கமாக வலுப்பெற்றிருக்காத காரணத்தால் இங்கிலாந்து ஏகாதிபத்தியத்தின் உதவியுடன் டி.எஸ்.சேனநாயக்கா ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியபோதும் அவர்களால் மிகவும் பலவீனமான ஆட்சியையே அமைக்க முடிந்தது. அவர்கள் தம் ஆட்சியை நிலைநிறுத்தத் திண்டாடினார்கள். பலப்பட்டுவந்த தொழிலாளர் இயக்கம் அவர்களுக்குப் பெரிய சவாலாக இருந்தது. 1947இல் நடந்த முதலாவது தேர்தலின் முடிவுகள் அவர்களின் பயத்தை மேலும் அதிகரிக்க வைத்தது.
அத்தேர்தலில் LSSP பத்து ஆசனங்களைப் பெற்று இரண்டாவது இடத்தைக் கைப்பற்றியது. நாடு முழுவதும் போட்டியிட வசதியற்ற காரணத்தால் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் போட்டியிட்ட இடதுசாரிகள் மொத்தமாகப் 19 ஆசனங்களைக் கைப்பற்றினர்.
ஆட்சி அமைக்கத் தடுமாறிக் கொண்டிருந்த வலதுசாரிச் ‘சிங்கள’ இனவாதிகளைக் காப்பாற்ற இத்தருணத்தில் தமிழ் வலதுசாரிக் காங்கிரஸ் கட்சியினர் ஓடி வந்தனர். ஜி.ஜி. பொன்னம்பலம் தலைமையில் அவர்கள் யு.என்.பி அரசுடன் இணைந்தனர். டி.எஸ்.சேனநாயக்கா இலங்கையின் முதற் பிரதமரானார். ஐம்பதுக்கு ஜம்பது என்று முன்பு படம் காட்டியவர் தனக்குப் பதவி கிடைத்ததும் அக்கோரிக்கையைத் தூக்கிக் குப்பையில் எறிந்த காரணத்தால் தமிழ்க் காங்கிரசுக்குள் பிளவுகள் ஏற்பட்டன. எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையில் 1949இல் பலர் காங்கிரசிலிருந்து பிரிந்து பிடரல் கட்சியை - இலங்கைத் தமிழரசுக் கட்சியை உருவாக்கினர்.
இத்தருணத்தில் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிய சிலோன் இந்தியர் காங்கிரசும் யு.என்.பி.க்கு ஆதரவளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பான்மை மலையக மக்கள் தமக்கெதிரான கொள்கைகளைக் கொண்டிருந்த யு.என்.பி க்கு வாக்களிக்க மறுத்திருந்தது இங்கு மிகவும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது. பின்பு மலையக மக்களுக்கு வாக்குரிமையை மறுக்கும் சட்டத்தை யு.என்.பி கொண்டு வந்த போது அதனால் தமது வாக்கு வங்கிக்கு ஒரு ஆபத்தும் வரப்போவதில்லை என்பதையும் அவர்கள் அறிந்திருந்தமையை நாம் கவனிக்க வேண்டும். இத்தருணத்தில் மலையக மக்கள் மத்தியில் இடதுசாரிகளுக்கு ஆதரவு பெருகி வந்தது என்பதையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.
ஆட்சிக்கு வந்த கையுடன் சேனநாயக்கா செய்த முதல் வேலை இடதுசாரிகளைத் தாக்கியதே. வரிசையாக அடக்குமுறைச் சட்டங்களை அமுல்படுத்தத் தொடங்கினார் அவர். இடதுசாரிகளுக்கு மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியிலிருந்த ஆதரவை உடைக்கவும், தமக்குச் சார்பாகச் சிங்கள இனவாத்தைத் தூண்டவும் மலையக மக்களின் உரிமைகளில் கைவைக்கத் தொடங்கினார். 1949ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் சட்டம் மலையக மக்களின் வாக்குரிமையைப் பறித்தது. இது தமிழ் பேசும் மக்களின் வாக்கு வீதத்தையும் கணிசமான அளவு குறைத்தது. பழைய கண்டிய பௌத்த முரண்பாடுகளை மீண்டும் தோண்டியெடுத்த சேனநாயக்கா ‘சிங்கள இனவாத’த்தை அறிமுகப்படுத்தினார். வளரும் தொழிலாளர் இயக்கத்தைத் துண்டாட எதையும் செய்யத் தயார் என்று சொன்னவரல்லவா அவர். ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கையை அவர் அப்படியே பின்பற்றினார்.
1947ஆம் ஆண்டு பொது மக்கள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் 1948ஆம் ஆண்டு தொழிற்சங்கச் சட்டம் முதலியனவும் தொழிலாளர் அமைப்புக்களின் முதுகெலும்பை உடைக்கும் நோக்கத்துக்காகவே உருவாக்கப்பட்டன. இவ்வகை உத்திகளும் தூண்டிவிடப்பட்ட சிங்கள பௌத்த பெரும்தேசியவாதமும் யு.என்.பிக்கு அடுத்த தேர்தலில் பெரும் வெற்றியீட்டிக் கொடுத்தது. அவர்கள் இவ்வாறு பலப்பட்டதற்குத் தமிழ் வலதுசாரிகள் முக்கிய பங்காற்றினர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நாடு முழுவதும் வறிய மக்கள், தொழிலாளர்கள், மலையக மக்கள் என்று ஒடுக்கப்பட்ட மக்கள் மேல் யு.என்.பி செய்த அனைத்துத் தாக்குதல்களுக்கும் தமிழ்க் காங்கிரஸ் கட்சியிலிருந்த வலதுசாரிகள் தமது முழு ஆதரவும் வழங்கிவந்தனர். இதன் காரணமாக ஜி.ஜி. பொன்னம்பலம் போன்ற ‘தமிழ்த் தலைவர்களின்’ செல்வாக்கு மங்கத் தொடங்கியது.
அவர்கள் தொழிலாளர்களின் நம்பிக்கையை, குறிப்பாகச் சிங்களத் தொழிலாளர்களின் நம்பிக்கையை இழக்கத் தொடங்கினர். யு.என்.பி யுடன் இணைந்து தாக்கிய தமிழ்த் தலைவர்களுக்கெதிரான சிங்களத் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பானது பின்பு அவர்கள் மத்தியில் சிங்கள இனவாதம் தூண்டப்பட உதவியது. செல்வாக்கு மங்கிய தமிழ்க் காங்கிரஸ் அடுத்த தேர்தலில் பல ஆசனங்களை இழந்தது. இதன்பின் மீண்டும் ஆதரவு தேட தமிழ்க் காங்கிரஸ் மோசமான பல குறுக்குவழிகளைத் தேடியது. எவ்வாறு வலது சாரிய யு.என்.பி சிங்கள பௌத்த இனவாதத்தைக் கையிலெடுத்ததோ, அதே போல் தமிழ்க் காங்கிரஸ் தமக்கு ஆதரவு சேர்க்க தமிழ் இந்துத்துவ இனவாதத்தைக் கையிலெடுத்தது.
யு.என்.பி தேர்தலில் வெற்றி பெற்ற போதும் கிராமப் பகுதிகளில் அவர்களின் செல்வாக்குக் குறைவாகவே இருந்தது. தொழிலாளர் சக்தியை உடைக்க அவர்கள் கையிலெடுத்த இனவாதம் அவர்களை நோக்கித் திரும்பும் அபாயத்தை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. யு.என்.பி யின் பெரும்பான்மைத் தலைவர்கள் கொழும்பு மேற்குடியைச் சேர்ந்தவர்களாயும் சிங்கள மொழி சரியாகப் பேச முடியாதவர்களாயும் இருந்தனர். சிங்கள இனவாதம் உக்கிரமடைந்தால் தம்மால் அதற்குத் தலைமை தாங்க முடியாது என்பதை இவர்கள் நன்றாக அறிந்திருந்தனர். போதாக்குறைக்கு இவர்களின் மோசமான வலதுசாரியக் கொள்கைகளால் தொழிலாளர் மத்தியில் பெருகிவந்த ஆத்திரத்தையும் அவர்கள் கவனிக்காமலில்லை.
இந்த போக்குகளின் தொடர்ச்சியாக யு.என்.பி யின் ஒரு பகுதியினர் SWRD பண்டாரநாயக்கா தலைமையில் பிரிந்து சென்றனர். வளரும் இடதுசாரி ஆதரவைக் கவனித்த SWRD சிங்கள ஏழை மக்களுக்காகப் பேசுபவராகத் தம்மைக் காட்டிக் கொள்ள முயன்றார். 1952இல் சிறிலங்கா சுதந்திர கட்சியை (Sri lanka Freedom Party) ஆரம்பித்த அவர் அந்த ஆண்டு தேர்தலில் SWRD க்குச் சரி நிகராக 9 ஆசனங்களைத் தமது கட்சிக்கு வென்றார். தமிழ் மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட நிலையில் யு.என்.பி 54 ஆசனங்களை வென்றது. தமிழ் வலதுசாரி வாக்குகளும் யு.என்.பி க்கே சென்றது குறிப்பிடத்தக்கது. தமிழ்க் காங்கிரசால் 4 ஆசனங்களை மட்டுமே பெற முடிந்தது.
இத்தேர்தல் வெற்றி யு.என்.பி க்கும் அவர்கள் பிரதிநிதித்துவம் செய்த வளரும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் பெரும் நிம்மதியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக தமிழ்-சிங்கள முதலாளித்துவ சக்திகளின் பலமான-தலையாய கட்சியாக யு.என்.பி தன்னை நிறுவியது.
இந்த வெற்றிக் கிறக்கத்தில் யு.என்.பி யினர் தாம் சார்ந்த வர்க்கத்துக்கு ஆதரவான கொள்கைகளை அமுல்படுத்துவதில் மும்முரமாக இறங்கினர்.
இதற்கு முன் தமது பலவீனமான அரசாங்கத்தின்போது ஏறத்தாழ 50 வீத அரச செலவுகளைப் பொதுச்சேவை (welfare) சார்ந்து செலவிட வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்தனர். தாம் பலமான ஆட்சியை ஏற்படுத்திய கையுடன் பொதுச் சொத்தைத் தனியார் வியாபாரிகளுக்காகக் கொள்ளைபோடும் கொள்கைகளை அறிமுகப்படுத்தத் தொடங்கினர். ஆத்தருணம் ஏற்பட்டிருந்த பொருளாதாரப் பின்னடைவைக் காரணங் காட்டிப் பொதுச் சேவைக்கான செலவுகளைக் குறைக்கத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை, குறிப்பாக உணவுப் பண்டங்களின் விலை அதிகரிக்கத் தொடங்கியது. உணவுப் பண்டங்களின் விலைகள் இருமடங்காகிப் பலமடங்காகிக் கூரையைப் பிய்த்துக் கொண்டு செல்லத் தொடங்கின. கடந்த வருடங்களில் பொது வேலை நிறுத்தம் உட்படப் பல்வேறு வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டிருந்த இலங்கைத் தொழிலாள வர்க்கம் மீண்டும் தமது பலத்தைக் காட்டவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது!
யு.என்.பி பெரும் வெற்றி பெற்ற ஒரு வருடத்துக்குள் இலங்கையின் மாபெரும் வேலை நிறுத்தம் நடந்தேறியது.
- சேனன் ( senann@hotmail.com )
நன்றி : கீற்று
மேலும் ஈழச்செய்திகளுக்கு இங்கே அழுத்தவும்...
Subscribe to:
Posts (Atom)








